Skip to main content

2023 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது; தமிழக அரசு அறிவிப்பு

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 Tamil Nadu Government Notification for ilakkiyamamani Award for the year 2023

மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு. சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகப் பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. 

அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியமாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப் பெறுவார்கள். இலக்கியமாமணி விருது 2022 ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க. இராமலிங்கம் (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

 Tamil Nadu Government Notification for ilakkiyamamani Award for the year 2023

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜீணன் (மரபுத்தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர. திருவிடம் (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த க. பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டிற்கு இலக்கியமாமணி விருதிற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்