Skip to main content

ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபடுவோம்! ம.ஜ.க. 6வது தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

மனிதநேய ஜனநாயக கட்சி 6வது தலைமை செயற்குழு கூட்டம் 14.03.2019 வியாழக்கிழமை சென்னை திருவல்லிக்கேணி அல்மாலிக் மஹாலில் அவை தலைவர் எஸ்.எஸ்.நாசர்உமரி தலைமையில் நடைபெற்றது.

 

 இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா.எம்.நாசர், இணை பொதுச் செயலாளர்களான கே.எம்.மைதீன் உலவி, ஜெ.எஸ். ரிபாயி, துணை பொதுச்செயலாளர்களான மதுக்கூர் ராவுத்தர் ஷா, கோவை சுல்தான் அமீர், மண்டலம் ஜெய்னுலாப்தீன், ஈரோடு பாரூக், மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்களான N.A. தைமிய்யா, நாச்சிக்குளம் தாஜுதீன், ராசுதீன், சீனி முகம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

 

இதில் தேர்தல் களப்பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் கூறிய கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிறகு பேசிய பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இதற்காக தலைமை தேர்தல் பணிக்குழு அமைக்கப்படும் என்றும், இதன் பொறுப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும், உறுப்பினர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, இணை பொதுச்செயலாளர்கள் மைதீன் உலவி, J.S.ரிபாயி ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஃபாசிஸ்டுகளை வீழ்த்தி, ராகுல் காந்தியை பிரதமராக ஆக்க வேண்டும் என்பதற்காக மஜக அரசியல் நிலைப்பாடு எடுத்திருப்பதாகவும், அதை இச்செயற்குழு உறுதிசெய்திருப்பதாகவும் கூறினார்.
 

mjk


 

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
 

1, நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கு வேண்டுகோள்;
 

 கடந்த ஐந்தாண்டு காலம் பாஜக தலைமையிலான ஆட்சியில் சமூக நீதி சிதைக்கப்பட்டும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படை கொள்கை தகர்க்கப்பட்டுள்ளனர். மதவாதம், ஊழல், மாநில உரிமைகள் பறிப்பு, கொலை, கொள்ளை, சுரண்டல், என நாடு நிர்மூல மாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
 

 

இத்தேர்தலில் ஃபாசிசம் ஒழிக்கப்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்பட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நாட்டில் அமைந்திட வாக்களிக்கும்படி இந்திய மக்கள் அனைவரையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

 

அந்த வகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான  கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மதிமுக, முஸ்லீம் லீக் மற்றும் இதர கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவது என்று இச்செயற்க்குழு தீர்மானிக்கிறது.
 

2. நிர்வாக குழு முடிவை செயற்குழு வரவேற்கிறது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தருவது என்ற தலைமை நிர்வாகக்குழுவின் முடிவை முழு மனதோடு இச்செயற்குழு வரவேற்கிறது.
 

3. CRPF வீரர்களின் தியாகத்தை மெச்சுகிறது. 
 

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கொடும் தாக்குதலால் உயிரிழந்த 44 CRPF வீரர்களின் தியாகத்தை இச்செயற்குழு மெச்சுகிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் துயரத்திலும் இச்செயற்குழு பங்கேற்க்கிறது. 
 

4. முகிலனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும்
 

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் போராளியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் உண்மை நிகழ்வை இதுவரை வெளிவராத தகவல்களுடன் ஆவணப்படம் மூலம் வெளிக்கொண்டு வந்த தோழர் முகிலன் அவர்கள் திடீரென காணாமல் போய் உள்ளார். அவர் எங்கே? என்ற கேள்வியுடன் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் தற்போது CBCID விசாரணையும் நடைபெறுகிறது.
 

நடைபெற்ற இச்சம்பவம், பொது வாழ்வில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது தமிழக அரசு உடனே அவரை மக்கள் மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

5. பொள்ளாச்சி பாலியல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை. 
 

பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்து, வக்கிர வெறியாட்டம் ஆடிய இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
 

 இந்த கொடியவர்களை எந்த வகையிலும் தண்டனையிலிருந்து தப்பவிடக்கூடாது. தாமதமின்றி இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு தரப்படும் தண்டனை இனி இது போன்ற தவறு செய்யும் நபர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

 

mjk 02


 

 மேலும் இவ்விவகாரத்தில் காவல் துறை அதிகாரி எஸ் பி பாண்டியராஜன், டி எஸ் பி ஜெயராம், எஸ்ஐ ராஜேந்திர பிரசாத் போன்றோர் மீது கடும் அதிருப்தியில் மக்கள் உள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
 

இவ்விசயத்தில் யார்  தலையிட்டாலும் அவர்களையும் இந்த குற்றத்தில் இணைத்து தண்டிக்கப்பட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. 
 

6. பொள்ளாச்சி பாலியல் வன்முறை வெறியாட்டத்திற்குள்ளான பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கொளரவத்தை கருத்தில் கொண்டு விசாரனை அமையவேண்டும் இச்செயர்க்குழு கேட்டுக்கொள்கிறது.
 

7. 28 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து கைதிகளையும் கோவை அபுதாஹிர், திண்டுக்கல் மீரான் மைதீன், போன்ற நோயாளி கைதிகளையும் உடனே விடுதலை செய்யவேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்