
திருச்சி மாவட்டம் தொட்டியம் வடக்கு சாலை அருகே கடந்த 7ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ராஜ்குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த வழியாக கார்த்திகேயன் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராத விதமாக அந்த லாரி ராஜ்குமார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு லாரியை நிறுத்தாமல் கார்த்திகேயன் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக நாமக்கல் சாலையில் ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு லாரியை மடக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் 15 நிமிடத்தில் காவலர்கள் அந்த லாரியை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை மஞ்சம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது நான்கு சக்கர வாகனம் மோதி நிறுத்தாமல் சென்றது.
அந்த வழக்கில் காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் அந்த காரை விரட்டிச் சென்றனர். பின்னர் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் வாகனத்தை மணப்பாறை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் மிக சிறப்பாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் பா.மூர்த்தி பாராட்டினார்.