புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ஆவுடையார்கோவில் தாலுகா களபம் ஊராட்சியில் கோதமங்களம் கிராமம். இந்த கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 54 ஹெக்டேர் ஏக்கர் பரப்பளவுள்ள கோதமங்களம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வழிகளையும், கண்மாயையும் அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 15 விவசாயிகள் சுமார் 15.2 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்து 15 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.

கோதமங்களம் கண்மாயின் நீர்வரத்து பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டதால் கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீர் முற்றிலுமாக தடுக்கப்பட்டது. இதனால் கோதமங்களம் கண்மாயிலிருந்து நீர் பாசன வசதி பெறும் சுமார் 200 ஏக்கர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை பாதுகாக்க வேண்டும் என்று கோதமங்களம் உள்ளிட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட ஆட்சியர் உமா குறிப்பிட்ட மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி விசாரணை செய்து ஆய்வுகளும் செய்யப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களிடம் உரிய முறையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விவசாயம் செய்யப்பட்டிருந்த நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்த வந்தனர்.

அப்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலத்தில் முழுமையாக நெல் பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. அதனால் பொக்கலின் இயந்திரங்கள் கொண்டு பயிர்கள் அழிக்கப்பட்டு எல்லைக்கல் நட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அறந்தாங்கி கோட்டாட்சியர் குணசேகரன், ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், பொறியாளர்கள் செந்தில்குமார், அண்ணாமலை, காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.