Skip to main content

செம்மரக் கடத்தல் வழக்கு; காவல் கண்காணிப்பாளர் நிரந்தர பணி நீக்கம்!

Published on 02/09/2024 | Edited on 02/09/2024
Superintendent of Police involved in sheep smuggling case permanently dismissed

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாமக பிரமுகரான சின்னபையன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் சந்தன மரக்கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தபோது வேலூர் மாவட்ட கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கவேலு, சின்னபையனுக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்த 7 டன் செம்மரக் கட்டைகளைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

மேலும் அந்த செம்மரக் கட்டைகளின் உரிமையாளர் செம்மரக் கட்டைகளைத் தேடி வந்தபோது காவல் துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதை சின்னப்பையன், கூறியுள்ளார். அதை நம்பாத கடத்தல் கும்பல் சின்னபையனை கடத்திச் சென்று சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த பெருமாள், தங்கராஜ், சத்தியமூர்த்தி, வெங்கடேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணையில், தங்கவேலுவின் உதவியுடன் சின்னபையனின் கோழிப் பண்ணையில் இருந்து 7 டன் செம்மரங்களைக் கடத்தி சென்றதாக வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன், அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சின்னபையனின் கோழிப்பண்ணையில் எடுத்துச்சென்ற 7 டன் செம்மரக் கட்டைகளில் 3.5 டன் அளவுக்கு நாகேந்திரன் வீட்டில் இருந்து காவல்துறையினர்  பறிமுதல் செய்து, அவரிடம் இருந்து ரூ.32 லட்சம் பணம் மற்றும் 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் வேலூர் கலால் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு கூறியதின் பேரில் நாங்கள்  சின்னபையனின் கோழிப் பண்ணையில் இருந்து செம்மரக்கட்டைகளைக் கடத்திச் சென்று அனைவரும் பங்கிட்டுக்கொண்டதாக நாகேந்திரன் தம்பதியினர் காவல்துறையினரிடம்  வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, தங்கவேலுவை கைது செய்த காவல்துறையினர் அவரை வழக்கின் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். பி்ன்னர், தங்கவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக  வழக்கின் விசாரணை ஆம்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தற்போது செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய தங்கவேலுவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்