Skip to main content

தற்கொலை தாக்குதல்கள் தொடருமா? அதிர்ச்சியில் தமிழகம்!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

கோவையில் கடந்த 12ம் தேதி  7 இடங்களில் சோதனை நடத்தி ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் அசாருதீன், ஷேக் இதயதுல்லா என்ற  இருவரை கைது செய்தனர். மேலும் 7 பேரிடம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கோவை மாநகர காவல்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முகமது உசேன், ஷாஜகான், சபியுல்லா ஆகிய மூன்றுபேரை பிடித்து இரண்டு தினங்களாக விசாரணை மேற்கொண்டனர்.

 

KOVAI



அப்போது விசாரணையில் தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் கொடுத்த தனி அறிக்கையின் அடிப்படையில், கைது  மூவர் மீதும் UAPA ( சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்  கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மூன்று பேரிடம் இரு தினங்களாக விசாரணை நடத்த பின் இன்று காலை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டதனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

 


இதனிடையே காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தடை செய்யப்பட்ட இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், அந்த அமைப்பின் வீடியோ காட்சிகளை பலருக்கு பகிர்ந்து கொள்வதாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை தமிழில் மொழியாக்கம் செய்து பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.



மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தி வரும் ஜிகாத் காட்சிகளின் வீடியோ காட்சிகளையும்  பகிர்ந்து வருவதாகவும் தெரிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். கோவை மாநகரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான தங்கள்  பலத்தை காட்டவும்,  பாடம் புகட்டவும் இவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது எனவும், கோவில்கள், தேவாலயங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கோவையில் ஜிகாதி சித்தாந்தங்கள், கொள்கைகள், நம்பிக்கைகளுக்கு எதிரான நபர்களையும், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களை கவனித்து அறிக்கை கொடுத்து வரும் நுண்ணறிவு பிரிவுகளில் உள்ள காவல்துறையினரை கொன்று மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் உருவாக்கவும்  முடிவு செய்திருக்கிறார்கள் என தெரியவருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து செல்போன், பென்டிரைவ், லேப்டாப் போன்றவைகளும்,  இஸ்லாமிய மார்க்கம் குறித்த புத்தகங்களும், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களும், வங்கி பாஸ் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்