![sub registrar Office Open Today Registration dept announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/4C8FeDk9BjxvpwcPmoign14fdNmkzwmlA_N84cCFcDs/1739238381/sites/default/files/inline-images/document-art_8.jpg)
தைப்பூச திருவிழாவையொட்டி பத்திரப் பதிவு அலுவலகங்கள் இன்று (11.02.2025) செயல்படவுள்ளன அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ளப் பொதுமக்கள் விரும்புகின்றனர். இதனால் பொது விடுமுறை நாளான (11.02.2025) செவ்வாய்க் கிழமை அன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே முந்தைய ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாகப் பதிவு அலுவலகங்களைக் காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.