Skip to main content

 ’’தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது”-மு.க.ஸ்டாலின் 

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:   ‘’ஏற்கனவே வெளியிடப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது மனமார்ந்த வரவேற்புக்குரியது; மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை மதித்து - “மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி” என்ற கழகத்தின் உயிர்மூச்சான ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றைப் பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அமைந்திருப்பது மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகவே நான் கருதுகிறேன்.

 

s

 

ஏழைகளுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயாக வழங்கப்படும் என்ற “ஏழ்மை ஒழிப்பு”த்திட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கிய சாதனையாக அமையப் போகிறது என்பது இத்தேர்தல் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏழைகளை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு அரசு, வருகின்ற ஜூன் 3 ஆம் தேதிக்குப் பிறகு மத்தியில் அமையப்போகிறது என்பது இந்தியத் திருநாட்டில் உள்ள 25 கோடி ஏழைகளின் முகங்களிலும் புன்முறுவலைக் கொண்டு வந்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கனவான “நீட்” தேர்வு ரத்து என்ற காங்கிரஸின் வாக்குறுதி எண்ணற்ற இளைஞர்களின் இதயத்தில் பால் வார்க்கிறது.

 

மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில் “பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்பதும், “பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்” என்பதும் மாநிலங்களின் தன்மானம் போற்றப்படும் அறிவிப்புகள். “விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்பது கடனில் துடித்துக் கொண்டிருந்த நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக அமைந்துள்ளது. இதுதவிர, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்” “ஜி.எஸ்.டி. சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்” “மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்” “வேளாண்மைக்கு தனி நிதி நிலை தாக்கல் செய்யப்படும்” என்பன போன்ற காங்கிரஸின் வாக்குறுதிகளும் “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துள்ளது தி.மு.க.” என்று கேலியும், கிண்டலும் பேசியவர்களுக்குக் கெட்டியான வாய்ப்பூட்டு போட்டிருக்கிறது.

 

பாரம்பரியமிக்க மாநிலக் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு மத்தியில் ஆட்சியமைக்கப் போகும் இன்னொரு பாரம்பரியமிக்க தேசியக் கட்சியின் ஒப்புதல் கிடைத்திருப்பது ஏழரைக் கோடி தமிழர்களின் குரலுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் மதிப்பிற்கும் ஒப்புதலுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

 

“பெண்கள், பழங்குடியின, பட்டியல் இன மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் பிரதிநிதித்துவம்” “தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு” “தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில், திட்டக்குழு ஆகியவை மீண்டும் அமைக்கப்படும்” “மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு” “சுகாதாரத் திட்டங்களுக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் நிதி ஒதுக்கீடு” “பட்டியல் இன, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புதல்” “கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு” “கழிவு அகற்றும் பணிகள் மனித உடல் உழைப்பால் செய்யப்படுவதற்கு மூன்று வருடத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” போன்ற முத்தான  திட்டங்களும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முத்திரை பெற்றிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் சென்று, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் பாதுகாக்கும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் வழங்கியிருக்கிறது!

 

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே “சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்” என்ற தலைவர் கலைஞர் அவர்களின் தாரகமந்திரத்திற்கும், பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டியாக இருந்து எண்ணற்ற சாதனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்த அன்னை சோனியா காந்தி அவர்களின் தொலை நோக்குப் பார்வைக்கும், இந்த நாட்டின் வருங்காலப் பிரதமர்  ராகுல் காந்தி அவர்களுக்கு ஏழைகளின் மீதுள்ள ஆழ்ந்த அக்கறைக்கும் சான்றாவணமாகத் திகழ்கிறது. இனிமேலாவது நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அளித்துள்ளது என்று விதாண்டாவாதம் செய்வோர் அதுபோன்ற கருத்துக்களில் இருந்து விடை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியக்கூறுகள் மிகுந்தவை என்றும், இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் ஜூன் மூன்றாம் தேதிக்குப் பிறகு ஒவ்வொன்றாக செயல்பாட்டிற்கு வரும் என்பதையும் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.