ரயில்கள் மூலம் கஞ்சா, மது பாட்டில்கள் உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபடுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள் சந்துரு, மணிகண்டன் ஆகியோா், ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரோந்து சென்றனா். அப்போது, போலீசார் இருவரும் 4-வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது. இதைக்கவனித்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்தப்பையை எடுத்துத் திறந்து பார்த்துள்ளனர். அதில், பண்டல்களாக கட்டப்பட்டு 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் இருவர், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் பதுக்கிய வைத்திருந்துள்ளனர். ரயில்வே காவலர்களின் இந்த சட்டவிரோத செயல், ரயில்வே எஸ்.பி ஈஸ்வரனுக்கு ரகசியமாகக் கிடைத்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே எஸ்.பி ஈஸ்வரன், சந்தேகத்தின் பேரில் இரண்டு காவலர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதில், ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் கிடந்த 9 கிலோ கஞ்சாவை காவலர்களே சேர்ந்து பதுக்கி வைத்திருந்து உறுதியானது. தொடர்ந்து, ரயில்வே காவலர்களின் சட்ட விரோத செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காவலர்கள் சந்துரு, மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ரயில்வே எஸ்.பி. அதிரடி உத்தரவிட்டார். பலரும் எஸ்பியின் உத்தரவை வரவேற்று வரும் நிலையில், ரயில்வே போலீசாரே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சம்பவம் ஜோலாா்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி எந்த காவலரும் இதுபோன்ற செயலில் ஈடுபடாத வகையில், துறைரீதியான ஆய்வுகள் செய்து ரயில்வே எஸ்.பி. நிரந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 9 கிலோ கஞ்சாவை பதுக்கிய 2 ரயில்வே காவலா்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.