Skip to main content

மூத்த பெண்ணிடம் உறவு கொண்ட கணவன்; தோழியிடம் கொடுத்த ஹிண்ட் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு:62

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
detective malathis investigation 62

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், வீட்டிலே தங்காத திருமணமான பையனை பற்றி அம்மா கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

இரண்டாவது முறையாக ஒரு பையனை பற்றி கேஸ் வந்தது. ஸ்கூல் படிக்கும் போது போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்த பையனை பற்றி ஏற்கெனவே ஒரு கேஸ் பார்த்திருக்கிறோம். அந்த பையனுக்கு ஏற்கெனவே கவுன்சிலிங் எல்லாம் கொடுத்த பின், அவனை சரிபடுத்தியதால் அவனை பற்றி ஓரளவுக்கு நமக்கு தெரியும். இப்போது அந்த பையனுக்கு காதல் திருமணம் ஆகி 5 வயது குழந்தை இருக்கிறது. வீட்டுக்கே வராமலும், மருமகளுடன் இல்லாமலும் பையன் இருக்கிறார் என அவரது அம்மா கேஸ் கொடுத்தார். விசாரித்ததில், இரவு நேரத்தில் ஆபிஸிற்கு செல்வதகாக கூறி வெளியே செல்வதாகவும், வீட்டில் சாப்பிடாமலும் ஒன்றரை வருடமாக இருக்கிறான் எனத் தெரிந்தது. காதல் திருமணம் என்பதால் பையன் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. மருமகளிடம் விசாரிக்கும் போது இந்த உண்மை தெரிந்தது என அந்த அம்மா சொன்னார். 

அதன்படி, அந்த கேஸை எடுத்துக்கொண்டு, அனைத்து விபரங்களையும் பெற்றுக்கொண்டு அந்த பையனை ஃபாலோவ் செய்ய ஆரம்பிக்கிறோம். ஆனால், அவன் ஆபிஸிற்கு செல்லாமல் ஒரு அப்பார்ட்மெண்டுக்குள் செல்கிறான். ஒரு நாள்,  மாலை நேரத்தில் ஒரு பெண்ணுடன் காரில் சென்றுக்கொண்டிருக்கிறான். அவர்களுடைய பழக்கம், நண்பர்களை மீறிய ஒரு நெருக்கமான உறவு இருப்பதாக தெரிந்தது. இரவு நேரத்தில் அந்த பெண்ணுடன் தங்கிவிட்டு, காலையில் தன்னுடைய வீட்டுக்கு வந்துவிடுகிறார். அதன் பின்பு, பையனை பற்றி தெரிந்துக்கொள்ள மருமகளிடம் பேச ஆரம்பிக்கிறேன். 

வீட்டில் இருந்தால், தன்னால் வேலை பார்க்க முடியாது. அதனால் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி ஒன்றரை வருடமாக கணவன் வீட்டில் தங்குவதில்லை என மருமகள் கூறினாள். மேலும், தன்னையும் தனது நண்பர்களுடன் வெளியே செல்லலாம் என கணவன் கூறியதால் தானும் அடிக்கடி வெளியே சென்றேன் என்றாள். வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், மனைவியுடன் வாழ விருப்பமில்லை என்று தனது தோழியிடம் கணவன் கூறியிருந்ததால் தான் சந்தேகம் ஏற்பட்டு மாமியாரிடம் சொன்னதாக சொன்னார். .

அதன் பின்பு, பையனுடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணை பற்றி விசாரித்ததில், அந்த பெண், இந்த பையனை விட 6 வயது மூத்தவள் என்பதும், ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்து டைவர்ஸ் ஆனவர் என்பதும் தெரிந்தது. அந்த பெண்ணை பற்றியும், மனைவியிடம் அடிக்கடி புகழ்ந்து பேசியிருக்கிறான். தானும் சிங்கிள் பேரண்டால் தான் வளர்ந்தேன், தனது பையனும் சிங்கிள் பேரண்டால் வளர விருப்பமில்லை என்று கூறி அந்த பெண் அழுதாள். அந்த பையனை பற்றி முழு விபரத்தையும் அறிந்த பின், பையன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று விபரங்களை கொடுத்தோம். இந்த உறவில் இருந்து வெளியே வர டைம் கொடுக்கும்படி மனைவியிடம் அந்த பையன் கேட்டிருக்கிறார். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்.