
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட்டி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்டது.
மருத்துவமனை திறக்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகளாகிய நிலையில், தற்போது, புறநோயாளிகள் பிரிவில் மேல் தளத்தில் ஆங்காங்கே டைல்ஸ் உடைந்ததால் அதனைச் சரி செய்து புதிய டைல்ஸ் ஒட்டும் பணிக்காக பழைய டைல்ஸ்களை அகற்றிவிட்டு கீழே உள்ள கலவையை உடைக்க முயன்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. மேல்தளம் காங்கிரீட்டுக்கு மேலே டைல்ஸ் ஒட்டுவதற்கு சமன் செய்ய மணல், சிமென்ட் கலவை நிரவி சிமென்ட் பால் ஊற்றி டைல்ஸ் பதிப்பது வழக்கம்.

ஆனால் இங்கு காங்கிரீட் கலவைக்கு மேலே செம்மண் கொட்டி சமன் செய்து அதன் மேல் ஆங்காங்கே சிமென்ட் பால் ஊற்றி டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் தான் டைல்ஸ் சேதமடைந்திருக்கிறது என்கின்றனர். புதிய டைல்ஸ் ஒட்ட பழைய மண் கலவைகளை அகற்றி வருகின்றனர்.பல ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் அள்ள அள்ள மண் கலவை வெளிவந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.