Skip to main content

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் சமூகநீதி சூறையாடல்: அரசே துணை போவதா? - ராமதாஸ் கண்டனம்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Social Justice Looting Against Reservation in Periyar University says ramadoss

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எதிரான பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூகநீதி சூறையாடப்படுகிறது: அதற்குத் தமிழக அரசே துணை போவதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 12 பேராசிரியர்கள் உள்ளிட்ட 26 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு (சிண்டிகேட்) ஒப்புதல் அளித்திருக்கிறது. 26 ஆசிரியர் பணியிடங்களில் 17 பணியிடங்கள் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், அந்த இடங்கள் பொதுப் போட்டிப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதும், அதற்கு தமிழக அரசே ஆதரவளித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் 114 ஆம் கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் நாள் நடைபெற்றது. அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், கூட்டத்தின் முடிவுகள் இப்போது தான் வெளியிடப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 12 பேராசிரியர்கள், 9 இணைப் பேராசிரியர்கள், 5 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 26 ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.  இந்தப் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையான 200 புள்ளி ரோஸ்டர் விதிகளுக்கு முரணாக அனைத்துப் பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது சமூக அநீதியாகும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்படவிருக்கும் 26 பணியிடங்களில் 10 பேராசிரியர்கள், 5 இணைப் பேராசிரியர்கள், 2 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 17 பணியிடங்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்பப்பட்டவையாகும். 200 புள்ளி ரோஸ்டர் விதிப்படி, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படும் போது, முதல் பணியிடம் பொதுப்போட்டி பிரிவுக்கும், இரண்டாவது பணியிடம் பட்டியல் வகுப்பு (அருந்ததியர்), மூன்றாவது பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, நான்காவது பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, ஐந்தாவது இடம் பொதுப்போட்டி பிரிவு, ஆறாவது இடம் பட்டியலினம், 15-ஆவது இடம் இஸ்லாமியர்கள், 50-ஆவது இடம் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இந்த 17 பணியிடங்களும் மீண்டும் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்புவதை அனுமதிக்கவே முடியாது.

பொதுப்போட்டிப் பிரிவில் முதல் முறை நிரப்பப்பட்ட பணியிடத்தை அடுத்த முறை அருந்ததியரைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்பதற்கு பெரியார் பல்கலைக்கழகத்திலேயே முன்னுதாரணங்கள் உள்ளன. இப்போது நிரப்பப்படவுள்ள 12 பேராசிரியர் பணியிடங்களில் ஒன்றான ஆங்கிலத்துறை பேராசிரியர் பணி பத்தாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. அந்த பணியிடத்தை நிரப்புவதற்காக 2015 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அப்போது அந்தப் பணியிடம் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்போது நியமனம் நடைபெறவில்லை. 2015 ஆம்  ஆண்டில் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட பணி இப்போது பொதுப்போட்டிக்கு மாற்றப்பட்டது  எப்படி?  என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும், அதன் தவறுகளுக்கு துணை போகும் அரசும் தான் விளக்க வேண்டும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் முதல் முறை பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் காலியான நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  நிரப்பப்பட்டன. அப்போதும் இந்த பணியிடங்கள் விதிகளுக்கு மாறாக பொதுப்போட்டிக்கு மாற்றப்பட்டன. அதைக் கடுமையாக கண்டித்து 18.09.2022 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டேன். பெரியார் பல்கலையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் பழனிசாமி தலைமையிலான விசாரணைக்குழு, இது தவறு என்று அதன் விசாரணை அறிக்கையில் கூறியிருக்கிறது.

அரசின்  விசாரணைக் குழுவால் தவறு என்று உறுதி செய்யப்பட்ட சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் செய்வதையும், அதை தவறு என்று கூறிய தமிழக அரசு, அத்தவறுக்கு இப்போது ஆதரவு அளித்து அங்கீகரிப்பதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூக நீதி சூறையாடல்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறையும், அதனால் நியமிக்கப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணை போவதாகவே கருத வேண்டியுள்ளது. அருந்ததியருக்கு இப்படி ஒரு சமூக அநீதியை இழைத்த தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர் பணிகளில் அருந்ததியர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. பெரியார் பல்கலைக்கழகம் இப்போது அரங்கேற்றவுள்ள இந்த விதி மீறலால், பட்டியலின அருந்ததியருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படும். அதுமட்டுமின்றி, இந்த 17 பணியிடங்களும் அடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்படுவதற்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும். சிலரின் சுயநலத்திற்காக மற்றவர்களுக்கான சமூகநீதி பறிக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக உழைத்தவர்களில் முதன்மையானவர் தந்தைப் பெரியார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சமூகநீதி சூறையாடல்கள் நடைபெறுவதை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொருமுறையும் இத்தகைய சமூகநீதி சூறையாடல்கள் குறித்து விவாதிக்கப்படுதல், விசாரிக்கப்படுவதல் ஆகியவற்றுடன் அந்த குற்றத்தை அரசு கடந்து செல்வதால் தான் இவை அடிக்கடி நிகழ்கின்றன. இத்தகைய சமூக அநீதிகளுக்கு துணைவேந்தரும், பதிவாளரும் பொறுப்பாக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் இனியும் சமூக அநீதி நடக்காமல் தடுக்க முடியும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 26 ஆசிரியர் பணியிடங்களை பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கி ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பல்கலைக்கழகமும், அரசும் கைவிட வேண்டும். அவற்றில் 17 பணியிடங்களை அருந்ததியர் பிரிவுக்கு ஒதுக்கி ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்தை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் நடைபெறவுள்ள பணி நியமனங்களில் 200 புள்ளி ரோஸ்டர் துல்லியமாக பின்பற்றப் படுவதையும், அதற்கான பதிவேடு  பராமரிக்கப்படுவதையும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும், உயர்கல்வித்துறையும் உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.