Skip to main content

"இது தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டிய விஷயம்" - சித்த மருத்துவர் கு. சிவராமன் பெருமிதம்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

sivaraman

 

முரட்டு காளைக்கு 37 கடிவாளங்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சித்த மருத்துவர் கு.சிவராமன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

 

விழாவில் சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசுகையில், "கரோனா காரணமாக பொதுவெளியில் இயல்பாக நடமாட முடியாத இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம். சித்த மருத்துவத்தின் மூலமாக கபசுர குடிநீர் என்ற விஷயம் எவ்வளவு வெகுஜன மக்களுக்கு பாதுகாப்பு அளித்தது என்பது உலகம் அறிந்த விஷயம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த மேடையில் இருக்கிறார். அதனால் இந்த நூலையொட்டி, சித்த மருத்துவ தளத்தையொட்டி சில விஷயங்களை சொல்லவேண்டும் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கபசுர குடிநீர் பற்றி 19 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. அந்த 19 கட்டுரைகளில் 3 கட்டுரைகள் பன்னாட்டு விஞ்ஞான தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை சித்த மருத்துவம் சார்ந்த சில அறிவியல் கருத்துகளை முன்னெடுத்து சொல்லும்போது, எல்லாம் சரி... ஆதாரப்பூர்வமாக இன்டக்ஸ் தளத்தில் வெளியிடுவது மாதிரியான ஆய்வுகள் இல்லையே என்றுதான் உலகத்தில் உள்ள விஞ்ஞானிகள் கூறினர். சென்னையில் சித்த மருத்துவக் கல்லூரியும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சியும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியும் இணைந்து நவீன அறிவியல் உலகின் உச்ச ஆய்வான ரேண்டமைஸ் க்ளினிக்கில் ட்ரையலை கபசுர குடிநீரில் செய்தனர். அந்த ஆய்வில் கபசுர குடிநீர் வைரஸை கட்டுப்படுத்துகிறது, எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது என்பது உறுதிசெய்யப்பட்டு பி.எம்.ஜே இண்டக்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழகமே, தமிழ்சமூகமே கொண்டாடவேண்டிய ஒரு விஷயம். இது ஒரு தொடக்கம்தான். 

 

சித்த மருத்துவத்தின் அறிவியலை, அனுபவக்கூறுகளை அறிவியல் உலகிற்கு எடுத்துச்செல்ல வேண்டிய மிகமுக்கியமான இந்த காலகட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முன்னெடுப்பினால் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையவுள்ளது. அதற்காக அமைச்சருக்கு சித்த மருத்துவ உலகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கபசுர குடிநீர் மட்டுமல்ல, இதுவரை அறிவியல் கண்களால் அவிழ்க்கப்படாத சிறுசிறு மூலிகைகளிருந்து பெருமருந்துகள் வரை சித்த மருத்துவத்தில் உள்ளன. வரவிருக்கும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் இது மாதிரியான சித்த மருத்துவ மருந்துகளையும் சித்த மருத்துவ அறிவியலையும் அறிவியல் கண்களோடு நாங்கள் எடுத்துச் செல்ல இருக்கிறோம். அதற்கான அத்தனை ஆய்வு தளங்களையும் இந்த ஆட்சியில் நீங்கள் அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பயமுறுத்தும் கருப்பு பூஞ்சை; என்ன சொல்கிறது சித்த மருத்துவம்?

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

sivaraman

 

கரோனா தொற்று ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்தே இந்தியச் சமூகம் இன்னும் மீண்டுவராத நிலையில், கருப்பு பூஞ்சையும் மக்களை ஒருபுறம் பயமுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தாக்குதலுக்கு உள்ளான சிலர் மரணித்துள்ளதால் இந்த நோய் குறித்தான அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கருப்பு பூஞ்சை நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும், அதற்கான சிகிச்சையாக சித்த மருத்துவம் என்ன முன்வைக்கிறது என்பது குறித்தும் அறிய சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

கருப்பு பூஞ்சை என்பது பூஞ்சையின் நிறமல்ல. மியூகார் என்ற இனத்தைச் சேர்ந்த பூஞ்சை உடலுக்குள் நுழையும்போது அது பாதிப்பு உண்டாக்கும் செல்கள் செயல்திறனற்று அழுகி இறந்தவுடன் அவை கருமை நிறமாகின்றன. அதனால்தான் அதற்குக் கருப்பு பூஞ்சை என்று பெயர். மியூகார் மைக்கோசிஸ் என்ற பூஞ்சை  பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் உள்ளது. அது கரோனா பாதித்த நோயாளிகளை அதிகம் தாக்குகிறது என்பதுதான் தற்போதைய சூழலில் வருத்தமான விஷயம். கரோனா தொற்றுக்குள்ளாவோர்கள் தீவிர மருந்து எடுப்பதினாலும், மோனோகுளோனல் ஆண்டிபாடீஸ் எனச் சொல்லப்படுகிற நோய் எதிர்ப்பு ஆற்றலில் மாற்றம் செய்யக்கூடிய மருந்துகளை எடுப்பதினாலும் இந்தப் பூஞ்சை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என முதலில் சந்தேகிக்கப்பட்டது. 

 

ஆனால், கடந்த இருநாட்களாக இது குறித்தப் பார்வை மாறியிருக்கிறது. "இதே மருந்துகளை 20 ஆண்டுகாலமாக பயன்படுத்தியுள்ளோம். அப்போதெல்லாம் இது மாதிரியான பூஞ்சை நோய் தாக்கவில்லை" என அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்தக் கரோனா வைரஸின் மாற்றுரு மூக்கின் உட்புறத்திலுள்ள சைனஸ் பகுதியில் உள்ள ரத்த நாளங்களைச் சிதைக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதான் தற்போதைய சூழலில் அனைத்து மருத்துவர்களின் ஒருமித்த குரலாகவும் உள்ளது. சைனஸ் பகுதியில் உள்ள இரத்த நாளங்களைச் சிதைப்பதினால் சிதைவுபட்ட இறந்த நெக்ரோடிக் திசுக்களோடு காற்றில் உள்ள பூஞ்சைகள் கலந்து எளிதில் வளர்ந்துவிடுகின்றன. சாதாரணமாக  நம்முடைய சைனஸ் பகுதியில் அதுபோன்ற பாதிப்புகள் இல்லாததால் அந்த பூஞ்சை நம்மைத் தாக்குவதில்லை. இந்த சிக்கலுக்கான முழுக்காரணமும் கோவிட் கிருமித்தொற்றினாலேயொழிய கையாளும் மருந்துகளால் அல்ல. 

 

பூஞ்சை தொற்று ஏற்பட்டவுடன் உடனடியாகக் கவனித்துவிட்டால் மருந்துகளில் காப்பாற்றிவிடலாம். பூஞ்சை தாக்குதல் ஏற்பட்ட உடனேயே மூக்கடைப்பு ஏற்பட்டு கருப்பு நிறத்திலோ அல்லது பழுப்பு நிறத்திலோ கெட்ட துர்நாற்றத்துடன் திரவம் வழியலாம். அதைத் தவிர்த்து, ஒரு பக்க தலைவலி, ஒரு பக்க கண் சிவந்துபோதல், ஒரு பக்க கண் மேல்கீழ் இமைகள் பிதுங்குதல் ஆகியனவும் கருப்பு பூஞ்சை அறிகுறிகளாக கணிக்கப்பட்டுள்ளன. 

 

கரோனா தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள் சுகாதாரம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாகக் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களைப் பார்க்க வேண்டும். அல்லது, வழக்கமாக நீங்கள் மருத்துவம் பார்க்கும் மருத்துவரைச் சந்திக்கவேண்டும். அவர்கள் பூஞ்சைகளுக்கு எதிரான மருந்துகளைக் கொடுத்து கட்டுப்படுத்திவிடுவார்கள். சித்த மருத்துவத்தில் கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்திட முடியும் என அந்த ஆய்வுகளுக்கும் தற்போதுவரை இல்லை.

 

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, இறந்துபோன திசுக்களின் மீது பூஞ்சை படிகிறது என்கிற அறிவியல் தெரியும்போது, திசுக்களில் இறப்பு நடக்காமல் இருப்பதற்கு ஆடாதொடை இலை கொடுக்கிறோம். அது ரத்தம் உறைந்துவிடாமலும் கசிந்துவிடாமலும் இருப்பதற்கு உதவியாக இருக்கும். நோய் எதிர்ப்பு குறைவதினால்தான் இது ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளதால் கசப்பு மற்றும் துவர்ப்பு மிக்க உணவுகளை எடுத்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். இன்றளவில் அதைத்தான் பரிந்துரைக்க முடிகிறது. இனி வரும்காலங்களில் நடைபெறும் ஆய்வுகளில் என்ன காரணத்தினால் இந்தத் தொற்று ஏற்படுகிறது என்பது விரிவாகத் தெரியவரும்போது என்ன மாதிரியான சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியும் என முடிவெடுக்கலாம். 

 

ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பூஞ்சை என்பது தொற்றல்ல. கரோனா வைரஸ்போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கெல்லாம் பரவாது. நம்முடைய வீட்டில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் மற்றொருவருக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், கருப்பு பூஞ்சை விஷயத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டாலும் அடுத்த 15 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருந்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்த வேண்டும்.

 

 

Next Story

கடன் வாங்கியவர் ஏமாற்றியதால் வேதனை; பார்வையற்ற மகனுடன் வயதான தம்பதி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019


சேலத்தில், கடன் வாங்கிய நபர்கள் ஏமாற்றியதால் விரக்தி அடைந்த வயதான தம்பதியினர், தனது பார்வையற்ற மகனுடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

p


சேலம் குகை கருங்கல்பட்டி கார்கானா ஆறுமுகம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவராமன் (77). இவர், அதே பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.


இவருடைய மனைவி புஷ்பா (66). இவர்களுக்கு பாபு (42), வெங்கடேஷ் (37) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் பாபு கண் பார்வையற்றவர். பெற்றோருடன் வசித்து வந்தார். வெங்கடேஷ், குகையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். 

 

p


சிவராமன் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த 5 லட்சம் ரூபாயை, தாதகாப்பட்டியைச் சேர்ந்த நாகசண்முகராஜ், பத்மினி ஆகியோருக்கு கடனாக கொடுத்திருந்தார். இந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்து, பார்வையற்ற மகன், மனைவியுடன் வாழ்ந்து வந்தார். 


கடன் வாங்கிய இருவரும் வட்டியை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் குடும்பம் நடத்த போதிய வருவாய் இல்லாமல் சிவராமன் தவித்து வந்தார். பக்கத்து தெருவில் வசித்து வரும் மகன் வெங்கடேஷ், இவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வந்தார். 


ஆனாலும் அவரிடம் இருந்தும் போதிய உதவிகள் கிடைக்கவில்லை. கடன் வாங்கிய நபரும் வட்டியையும், அசலையும் தராமல் சாக்குப்போக்கு சொல்லி அலைக்கழித்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த சிவராமன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். அதன்படி திங்கள்கிழமை (ஏப்ரல் 1, 2019) இரவு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து பார்வையற்ற மகனுக்கு முதலில் குடிக்கக் கொடுத்துள்ளனர். பிறகு கணவன், மனைவி இருவரும் விஷ குளிர்பானத்தைக் குடித்து மயங்கி விழுந்தனர்.


செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) காலையில் சிவராமனின் வீட்டுக்கதவு திறந்த நிலையில் இருந்தது. தினமும் காலையில் பால் வாங்குவதற்காக வரும் புஷ்பா காலையில் வராததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டுக்குச்சென்று பார்த்தனர். அங்கு கணவன், மனைவி, பார்வையற்ற மகன் ஆகிய மூவரும் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

 

p


இதுகுறித்து சிவராமனின் மற்றொரு மகன் வெங்கேடசுக்கும், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். செவ்வாய்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து, சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


அந்த வீட்டில் நடத்திய சோதனையில், இறந்துபோன சிவராமன், கடன் கொடுத்ததற்கான பத்திரம் ஒன்றும், கடிதம் ஒன்றும் இருந்தது. அந்த கடிதத்தில் சிவராமன் உருக்கமாக எழுதியிருந்தார்.


அதில், ''சிறுக சிறுக சேர்த்த பணத்தை வைத்து வயதான காலத்தில் பார்வையற்ற மகனுடன் வாழ்ந்து விடலாம் என்று நினைத்து கையில் இருந்த 5 லட்சம் ரூபாயை கடனுக்கு கொடுத்தேன். ஆனால் சிறிது காலம் வட்டி கொடுத்துவிட்டு, பிறகு ஏமாற்ற துவங்கினர். கையில் காசு இல்லாமல் கஷ்டப்பட்டேன். இதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை,' என எழுதியுள்ள அவர், இறுதியில் 'இதுவும் கடந்து போகும்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.  மேலும் வட்டிக்கு வாங்கியதுடன், வட்டியை கொடுக்காமல் மிரட்டிய இரண்டு பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.