Skip to main content

ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

Seven I.A.S. Tamil Nadu government orders transfer of officers

தமிழகத்தில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு நேற்று (07/08/2021) வெளியிட்ட அறிவிப்பில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அவரை பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

 

பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஜே.ஆனி மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் எம்.லஷ்மி, சி.எம்.டி.ஏ. தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்