Skip to main content

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
Seeman



அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (1911-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள சூடகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ் – சுவாதி ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதால் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

சாதியத்தினையும், அதன் விளைவாக நடந்தேறும் இதுபோன்ற கொடூரச்செயல்களையும், வன்முறை வெறியாட்டங்களையும் எதன்பொருட்டும் ஏற்க முடியாது. இவையாவும் அரசாங்கத்தினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய பெருங்கொடுமைகள். இதனைச் சகித்துக் கொள்வது என்பது மனிதத்தன்மையே அற்றக் கொடுஞ்செயல்.
 

சாதி என்பது சமூகத்தில் புரையோடிப் போகியிருக்கிற கொடிய நஞ்சு; மனிதனின் ஆழ் மனதில் படிந்திருக்கிற பெரும் அழுக்கு. நம்மைப் போல நாடி, நரம்பு, இரத்தம், சதை, உறக்கம், கனவு, பசி என எல்லாவற்றையும் கொண்டிருக்கிற சக மனிதனைச் சாதியின் பெயரால் பிளவுப்படுத்துவதும், பாகுபடுத்தித் தீண்டாமை கொடுமைக்குள் தள்ளுவதுமான செயல்கள் யாவும் மனிதனைப் பிடித்திருக்கிற மனநோய். 
 

அம்மனநோயை சிந்தையிலிருந்தே அகற்றி சாதிய உணர்வற்றத் தமிழ் தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டியது தமிழர் ஒவ்வொருவருக்குமான சமூகப் பெருங்கடமை. தமிழ்ச்சமூகத்தைப் பிளந்து பிரித்தாளுவதற்கு வசதியாக இடைக்காலத்தில் பார்ப்பனீயம் உட்புகுத்தியச் சூழ்ச்சியே சாதி. 
 

அதனை அடிப்படையாகக் கொண்டு சக மனிதனை அடிமைப்படுத்துவதும், அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு கொலை செய்வதுமான இக்கொடூரங்கள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. 
 

நாகரீகமும், விஞ்ஞானமும் வளர்ந்து நிற்கிற இருப்பத்தோராம் நூற்றாண்டில் நடந்தேறும் ஆணவக்கொலைகளும், சாதிய வெறியாட்டங்களும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. 
 

இச்சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், சாதியக் கருத்தாக்கத்திற்கு எதிராகவும் களப்பணியும், கருத்தியல் பணியும் ஆற்ற வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் தருணமிது.
 

மனமொத்த ஒரு ஆணும், பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையிருக்கிறது. அதில் பிறிதொருவர் தலையிடுவதற்கோ, அத்துமீறி அதிகாரம் செய்வதற்கோ எவ்வித உரிமையுமில்லை. 
 

அறவுணர்ச்சியும், சட்டதிட்டங்கள் இரண்டுமே இதனைத்தான் கூறுகின்றன. நமது பாட்டன் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அவர்கள் சாதியினைத் துடைத்தெறிவதற்கு இருக்கிற பெரும் வாய்ப்பாக சாதி மறுப்புத் திருமணங்களைத்தான் குறிப்பிடுகிறார். 
 

சாதியை மறுத்து நிகழும் இவ்வகைத் திருமணங்கள் யாவும் வரவேற்கத்தக்கவை. அவற்றை கலப்புத் திருமணங்கள் என்பதே அபத்தமானது. அவை சாதி மறுப்புத் திருமணங்கள் அவ்வளவே.
 

சாதி மறுப்புத் திருமணங்கள் செய்வதாலேயே ஆணவக் கொலை செய்யும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகமாகி வருவது பெரும் வேதனையளிக்கிறது. திருப்பூரில் பட்டப்பகலில் தம்பி உடுமலைப்பேட்டை சங்கர், சேலம் ஓமலூரைச் சேர்ந்தத் தம்பி கோகுல்ராஜ் எனத் தொடரும் இக்கொலைகள் யாவும் இச்சமூகத்தின் நல்லிணக்கத்தையும், மனித உணர்வையும் அடியோடு கொன்று மிருகத்தன்மையை வளர்க்கும் பெருந்தீங்குகளாகும். 
 

அதனைப் போல, தற்போது நித்தீஷ் – சுவாதி இணையர் இருவரும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றனர். சேலத்தில் தங்கை இராஜலட்சுமி சாதியத்தால் கொலை செய்யப்பட்ட சோகத்தின் வடுக்களே ஆறாதநிலையில் நிகழ்ந்திருக்கும் இப்படுகொலை பெரும் மனவலியினைத் தருகிறது. 
 

ஆணும், ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் ஓரினச்சேர்க்கை முறையினையே மேலை நாடுகள் அங்கீகரித்துக் கொண்டிருக்கையில், இயல்பாக நிகழ்ந்தேறும் காதல் திருமணங்களை இங்கு சாதியத்தின் பெயரால் முறித்துவிடுவதும், கொலைசெய்வதுமானச் செயல்கள் தமிழ்ச்சமூகத்தைப் பல நூற்றாண்டுகள் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றன.


சாதிய உணர்வினையும், சாதிய வன்முறை வெறிச்செயல்களையும் அழித்தொழிக்க பலத் தளங்களிலும் களப்பணியாற்றுவதே அதனை முழுமையாக இச்சமூகத்திலிருந்து அகற்றுவதற்குரிய மாமருந்தாக இருக்கும். அதற்குக் கல்வியிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
 

சாதியினைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்தி வாக்கு அரசியல் செய்யும் இருபெரும் திராவிடக் கட்சிகளும் சாதியக் கொலைகளின்போதும், சாதிய மோதல்களின்போதும் கள்ளமௌனம் சாதிக்கிறபோதே இவர்களின் உண்மை முகத்தையும், இவ்வகை சாதிய மோதல்கள் யாருக்குப் பயனளிக்கிறது என்பதனையும் உணர்ந்துகொள்ள முடியும்.
 

சாதிய எண்ணம் கொண்டு மிகச் சாதாரணமாகக் கொலைசெய்யும் துணிவு வருகிற அளவில்தான் சாதியத்தை அலட்சியப் பார்வையோடு ஆளும் வர்க்கங்கள் அணுகி வருகின்றன. அது ஏற்புடையதன்று!
 

ஆகவே, அதிகரித்து வரும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுஞ்சட்டங்கள் இயற்றி அவற்றை முழுதாய் ஒழித்திட வேண்டும் எனவும், இப்படுகொலையினால் பாதிக்கப்பட்டு இருக்கிற குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்