Skip to main content

வேகமாக பரவும் இரண்டாவது அலை! கரோனா பீதியில் வேட்பாளர்கள்!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

The second wave to spread fast! Candidates in Corona Panic!


தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும், அக்கட்சியின் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது.

 

கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகமும், மாநில சுகாதாரத்துறையும் எச்சரிக்கை செய்தபடி இருக்கின்றன. முகக் கவசம் அணிதல் வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கூட்டமாக சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்து வருகிறது சுகாதாரத்துறை. இருப்பினும் இவையெல்லாம் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அலட்சியப்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.

 

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவின் சோழிங்கநல்லூர் வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், தேமுதிக வேட்பாளர்கள் விருகம்பாக்கம் பார்த்தசாரதி, சேலம் மேற்கு மோகன்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அண்ணாநகர் பொன்ராஜ், வேளச்சேரி சந்தோஷ்பாபு, அ.ம.மு.க.வின் திருவள்ளூர் வேட்பாளர் குரு உள்ளிட்ட வேட்பாளர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள். 

 

அதேபோல, தேமுதிகவின் சுதீஷ், திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர். இதில், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏற்கனவே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர். அவருக்கு எப்படி தொற்று வந்தது? என திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

கட்சிகளில் உள்ள மூத்த நிர்வாகிகள் வேட்பாளர்களாக இருப்பதோடு, தங்கள் மாவட்டங்களில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பிலும் இருப்பதால், கரோனா பரவல் அச்சம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. வேட்பாளர்களை கரோனாவின் இரண்டாவது அலை தாக்கிவருவதால், பல தொகுதிகளில் தேர்தல் பணிகள் மந்தமாகியுள்ளன. வேட்பாளர்கள் இல்லாமல் கட்சி நிர்வாகிகள்தான் ஓட்டு கேட்டு வருகின்றனர். கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாகி வருவது அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் வேட்பாளர்களர்களிடமும் பீதியை உருவாக்கி வருகிறது!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; திருச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

covid infection increased trichy womens admitted government hospital

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

 

தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் நேரு கூறியுள்ளார்.