திருச்சி வயலூர் அம்மையப்ப நகரைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி (48). இவர் திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், இன்று (20.11.2021) காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
நீதிமன்ற எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா அருகே வந்தபோது அவ்வழியாக வந்த திருச்சி தனியார் கல்லூரி பேருந்து ஆசிரியையின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மங்கையர்க்கரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.