Skip to main content

சேலம் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை! வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு!!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
bhuvaneswari


சேலத்தில் கணவர், மாமியாரின் வரதட்சணை கொடுமையை தாங்க முடியாத விரக்தியில் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரிக்கரை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் புவனா என்கிற புவனேஸ்வரி (33). இவருக்கு, பழைய சூரமங்கலம் கபிலர் தெருவைச் சேர்ந்த கவுதமன் என்பவருடன் மூன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

கடந்த 2008ம் ஆண்டு தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலராக புவனேஸ்வரி (காவலர் எண்: 1204) பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் போலீஸ் பயிற்சிப்பள்ளியில் பயிற்சியை நிறைவு செய்தார். சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த புவனேஸ்வரி, கடந்த ஜூலை 9ம் தேதி, ஜலகண்டபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

புவனேஸ்வரி கம்ப்யூட்டரில் பயிற்சி பெற்றவர் என்பதால், ஜலகண்டாபுரத்தில் இருந்து சில நாள்களிலேயே சேலம் மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பணிக்கு அழைக்கப்பட்டார். கணவர், மாமியார் ஆகியோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக சமீப காலமாக பெற்றோர் வீட்டில் இருந்துதான் அலுவலகத்துக்குச் சென்று வந்தார்.

நேற்று இரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை தந்தை செல்வராஜ் எழுந்து பார்த்தபோது, வீட்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு புவனேஸ்வரி சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் நிலையைக் கண்டு மொத்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணத்தின்போது புவனேஸ்வரிக்கு 25 பவுன் நகைகளும், பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு உள்ளன. கவுதமன் பி.டெக். இன்ஜினியரிங் படித்துள்ளதால் வரதட்சணையாக 50 பவுன் நகைகள் வேண்டும் என்று திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளனர். அப்போது, விடுபட்ட சீதனத்தை பின்னர் தருவதாக புவனேஸ்வரியின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி அவர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.

இதனால் மாமியார் தொடர்ந்து புவனேஸ்வரியிடம் பெற்றோரிடம் இருந்து நகைகளை வாங்கி வரும்படி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், மகனிடமும் பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளார். இதற்கிடையே, அவருக்கு கவுதமனிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸூம் அனுப்பப்பட்டு உள்ளது.
 

bhuvanes


சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், விவாகரத்து கொடுக்க விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். ஆனாலும், கணவரை சந்தித்துப்பேச மாமியார் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். மேலும், எப்படியாவது விவாகரத்து பெற்று, மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் முடிக்கவும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட விரக்தியால்தான் புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. புவனேஸ்வரி தற்கொலை பற்றி அறிந்த சக பெண் போலீசார் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சேலம் மாவட்ட ஆயுதப்படையில் புவனேஸ்வரியுடன் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் கூறுகையில், ''புவனாவும் நானும் ஒரே 'பேட்ச்'தான். ஒன்றாகத்தான் காஞ்சிபுரத்தில் பயிற்சியை நிறைவு செய்தோம். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். நிறைய காமெடியாக பேசுவார்.

பெரும்பாலும் அவர் சொந்த விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார். சில நேரங்களில் சொந்த விஷயங்களைப் பேசியிருக்கிறார். அவருடைய கணவர் வேலைக்கு எதுவும் போகவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் மீது ரொம்பவே உயிராக இருப்பதாகவும், மாமியார்தான் கணவருடன் பேச அனுமதிப்பதில்லை என்றும் சொல்வார்.

மாமியார் பணம், நகைகள் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்குமேல் அதைப்பற்றி விரிவாக எதுவும் சொன்னதில்லை. புவனாவின் தங்கையும் பெண் காவலர்தான். அவரிடம் கூட ஏதோ மனஸ்தாபத்தில் பேசாமல் இருந்து வந்தார்.

குடும்ப பிரச்னைகளால் புவனா, அனுமதியின்றி தொடர்ந்து இரண்டு மாதங்கள் விடுப்பில் இருந்தார். அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய புரமோஷன் கூட கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய்விட்து. எங்கே, எப்போது பணிக்கு அனுப்பினாலும் சளைக்காமல் பணியாற்றுவார். அவருக்கு சாப்பிடுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். புவனாவுடன் பழகிய நாள்களை மறக்க முடியாது,'' என்று கூறி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளுக்குள் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கை சேலம் கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.