![The electric pole that fell on those who were sleeping! One passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/KCSqYeUgUg4Ov5sKlK4Ecfe8mK9SA6Rvl60v8KXiuu0/1654173842/sites/default/files/inline-images/hand-in_205.jpg)
விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோவில். நேற்று முன்தினம் இரவு, இந்தக் கோவில் வாசலில் விழுப்புரம் கல்லூரி சாலையைச் சேர்ந்த கணேசன்(58), கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம்(70) மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த மணி(40) ஆகியோர் படுத்துத் தூங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அருகில் இருந்த பழுதடைந்த ஒரு மின் கம்பம் திடீரென மூவர் மீதும் சாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமலிங்கம், மணி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து உயிரோடு இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.