Skip to main content

சேலம்: மூவர் கொலை வழக்கில் கைதான வடமாநில வாலிபர்களுக்கு குண்டாஸ்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

salem district three youths goondass act


சேலத்தில் வட இந்தியத் தம்பதி உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உத்தரபிரதேச வாலிபர்கள் மூவரைக் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 


சேலத்தை அடுத்த பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். வெள்ளிப்பட்டறை உரிமையாளர். இவர் தனது பட்டறையில் வடமாநில இளைஞர்களை வைத்து வேலை செய்து வருகிறார். இவருடைய வெள்ளி பட்டறையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ், அவருடைய மனைவி வந்தனாகுமாரி ஆகியோர் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். அவர்களுடைய உறவுக்காரர் ஒருவரின் மகன் சன்னிகுமார் என்பவரும் ஆகாஷ் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

கடந்த மார்ச் 8- ஆம் தேதி இரவு, ஆகாஷ், அவருடைய மனைவி, உறவுக்காரர் மகன் ஆகிய மூவரையும் மர்ம நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த சேலம் மாநகர காவல்துறையினர், கொலை சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த மங்கள்சிங் மகன் வினோத் (30), கேதார்சிங் மகன் அஜய்குஷ்வா (26), ரகுவீர்சிங் மகன் சூரஜ் (25) ஆகியோரைக் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 


இவர்கள் மூவரும் மக்கள் வசிக்கும் பகுதியில் திட்டமிட்டு கொலையை அரங்கேற்றி இருந்தனர். அவர்களின் கொடூர செயலால் அப்பகுதியில் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, காவல்துறை ஆணையர் செந்தில்குமாருக்குப் பரிந்துரை செய்தார். 

இதையடுத்து மேற்படி குற்றவாளிகள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடமும் வெள்ளிக்கிழமை (மே 8- ஆம் தேதி) நேரில் சார்வு செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்