Skip to main content

இளம்பெண் தற்கொலை! கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

police

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள இருளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (30). இவர் விருத்தாசலம் வருவாய்த் துறையில் மங்கலம்பேட்டை குறுவட்டத்தின் நில அளவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிபாரதி (21). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆன நிலையில் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

 

இந்நிலையில் மணிபாரதியிடம் வரதட்சணை கேட்டு சிவா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மணிபாரதி கணவரிடம் கோபித்துக்கொண்டு நெய்வேலி அருகே உள்ள தொப்பிளிக்குப்பம் கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் மனமுடைந்த நிலையில் இருந்த மணிபாரதி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி மணிபாரதி உயிரிழந்தார். 

 

இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 'மணிபாரதியின் உயிரிழப்புக்கு அவரது கணவர் சிவா மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமை தான் காரணம், அதனால் சிவாவை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விருத்தாசலம் - கடலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்ற மணிபாரதியின் உறவினர்கள் சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம், இல்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

 

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.