தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் மூன்று பேர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுபவர்கள் யார் யார் என்பதற்கான திமுக வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன் ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு மார்ச் 6 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். மார்ச் 16 ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 19 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மேலும் இந்த வேட்பாளர் பட்டியலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.