Skip to main content

புகழேந்தியை நீக்கிய விவகாரம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Pukahendi case: Special court orders OPS-EPS appellant

 

சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதால் அவதூறு வழக்கில் ஆஜராவதற்கு விலக்கு கோரிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14ஆம் தேதி இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

 

அதில் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராகவும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் நீக்கம் என கூறப்பட்டிருந்தது. இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இன்று (24.08.2021) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரகாஷ், சட்டசபை நடந்துகொண்டிருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை எனவும் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்பதால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜரானார். ஆஜராகாததற்கான காரணம் நியாயமானதுதான் என தெரிவித்த நீதிபதி, எனினும் வழக்கின் முதல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் என்பதால் நேரில் ஆஜராகுவதற்கு விலக்கு அளிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

'ஜெயலலிதாவின் வாரிசு ஓபிஎஸ் என்பதை நிரூபித்துவிட்டார்' - புகழேந்தி பேட்டி

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

'Jayalalitha's successor has proved that he is OPS'-pugazhendi interview

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். அப்போது பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

மேலும் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் 2 ஆயிரத்து 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இரு வழக்குகளும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, “இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6 ஆம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

'Jayalalitha's successor has proved that he is OPS'-pugazhendi interview

 

பின்னர் நீதிமன்றத்தின் வெளியில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, 'நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா அவர்கள் அளித்த தீர்ப்பினை தலை வணங்கி ஏற்பதாகவும் வரவேற்கிறேன். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டும் தீர்மானத்திற்கு இரண்டாவது முறையாக ஆதரவளித்தார். ஒப்புதல் தராமல் ஆளுநர் வைத்திருந்து திருப்பி அனுப்பியது தவறு என மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கு ஆதரவாக குரல் வாக்கெடுப்பின் மூலம் ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

 

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று 2020இல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்பதனை மறந்து ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் பழனிசாமி வெளிநடப்பு செய்தார். அவரை சார்ந்தவர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் உள்ள அமைச்சர் சுட்டிக் காட்டி ஜெயலலிதா மீது அக்கறை இல்லாத பழனிசாமி என்பதை விவரித்து பேசியதை மறந்து விட முடியாது.. யாருக்கோ பயப்படுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டார்கள். ஜெயலலிதா பெயரில் மீன்வள பல்கலைக்கழகம் என்ற தீர்மானத்திற்கு ஆதரவளித்து ஜெயலலிதாவின் வாரிசு ஓபிஎஸ் என்பதை ஓபிஎஸ் அவர்கள் சட்டமன்றத்தில் நிரூபித்து விட்டார்கள்'' என்றார்.