Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடிதான் உத்தரவிட்டார்! திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
thi


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடிதான் உத்தரவிட்டார் என்று சேலத்தில் திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஜூலை 20, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது:


எட்டு வழிச்சாலைத் திட்டம் அமையவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அப்படியிருந்தும், அரசு இந்த சாலைத் திட்டத்திற்காக துணிச்சலாக நிலங்களை கையகப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இந்த சாலைத் திட்டத்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?


முதலில் கிராமச்சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளுடன் இணையுங்கள். பல கிராமங்களில் சுடுகாட்டுக்குப் போக சாலை வசதி இல்லை. உழைக்கும் தொழிலாளர்கள் செல்லும் பாதையில் சாலை வசதி இல்லை. விவசாயிகள் சென்று வர சாலை வசதி இல்லை. இருக்கின்ற பசுமையை எல்லாம் அழித்துவிட்டு, பத்தாயிரம் கோடியில் பசுமைவழிச் சாலை போடுவது என்பது சுத்த அயோக்கியத்தனம்.


அரசுக்கு தெரிந்தோ தெரியாமலோ முதல்வரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் இப்போது வருமானவரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இணக்கமாக இல்லை என்பதையே இந்த சோதனைகள் காட்டுகின்றன. இந்த அரசு ஊழல் அரசு என்று பாஜக தலைவர் அமித்ஷா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இதே கருத்தை, அவர் பாஜக ஆளும் மாநிலங்களில் சென்று சொல்லி விட முடியுமா?

 

thi


இப்போதுள்ள ஊழலைவிட ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலகத்திற்குள்ளேயே புகுந்து ரெய்டு நடத்தினார்கள். உண்மையில் அப்போதுதான் ஊழல் அதிகமாக நடந்துள்ளது. மத்திய அரசு தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காகவே வருமானவரித்துறை, சிபிஐ மூலம் இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருகிறது. இதுபோன்ற ரெய்டுகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் நடந்தது.


மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். 


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார்? என்பது எனக்குத் தெரியும். உண்மையிலேயே அதுபற்றி அப்போது முதல்வருக்கு தெரிந்திருக்காது என்றுதான் கருதுகிறேன். ஏனென்றால் நானே டிவியில் வந்த செய்தியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்து கொண்டேன் என்று முதல்வரே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடிதான் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.


ஆனாலும் ஒரு விதத்தில் எடப்பாடி பழனிசாமி கில்லாடிதான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சியையும் கட்சியையும் கில்லாடித்தனமாக கைப்பற்றியிருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர மோடி நினைப்பது வேதனையாக இருக்கிறது. 


இந்த எட்டு வழிச்சாலை மக்களுக்கான சாலை அல்ல. சேலத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்பு, மாக்னசைட் உள்ளிட்ட கனிமங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காகவே போடப்படுகிறது. இங்கிருந்து கனிமங்களை நேரடியாக துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வருகின்றனர். எட்டு வழிச்சாலைத் திட்டத்தை தடுத்த நிறுத்த விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராடும்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 700க்கும் மேற்பட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, அக்கட்சியினர் 'கைவிடு கைவிடு எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடு', 'எடப்பாடி அரசே மோடி அரசே வேண்டாம் வேண்டாம் எட்டுவழிச்சாலை வேண்டாம்' என்று முழக்கங்களை எழுப்பினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.