
அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களது வீடு அருகிலேயே ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்த வளன், நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபாஷ் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இவர்கள் இருவரும் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு 3வயது பெண் குழந்தை அடிக்கடி சென்று விளையாடிவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை குழந்தை அவர்களது வீட்டுக்கு சென்று உள்ளது. அப்போது, அந்த குழந்தைக்கு வளன், சுபாஷ் இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர், குழந்தை வீட்டுக்கு ஓடி வந்து அழுது கொண்டு இருந்து உள்ளது.
இதனையடுத்து, தம்பதியினர் வாலிபர்களிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், போலீசார் வளன், சுபாஷ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இருவரும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதன்பிறகு, போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பெண் குழந்தைகளை தெரிந்தவர்கள் வீட்டிற்கு அனுப்புவதிலும்கூட தாய் தந்தை மிகுந்த கவனத்துடன் அனுப்ப வேண்டும் என காவல்துறையினர் தெவித்தனர்.