
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உட்பட மேலும் மூன்று பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மேலும் மூன்று பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.