
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது, சிலைகளைக் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் 20க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தனர். அதை ஊர்வலமாக எடுத்துச் செல்ல உள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்த விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி. பழனிச்சாமி தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று இந்து முன்னணியினர் கொண்டுவந்த விநாயகர் சிலைகளைப் பறிமுதல் செய்தனர். அப்போது இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்து முன்னணியினர், விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினரைக் கண்டித்து கோஷமிட்டனர். இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அதேபோல், விழுப்புரம் - சென்னை சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில், மாலை 5 மணி அளவில் பாஜக நிர்வாகிகள் விநாயகர் சிலையை அலுவலகம் முன்பு வைத்து வழிபாடு செய்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு சென்று, பொது இடத்தில் சிலை வைத்து வழிபடக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வழிபாடு செய்த விநாயகர் சிலையை அலுவலகத்திற்கு உள்ளே கொண்டு சென்று வைத்து வழிபட்டனர். இதனால் அங்கு போலீசாருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.