திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று அதிகாலை அரசு பேருந்தும் தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கிராமிய தலைமை காவலர் முரளி (46) என்பவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் சக காவலர்கள் அவரை மீட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று தலைமை காவலர் முரளியின் சொந்த ஊரான ஆம்பூர் ஏ - கஸ்பா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஏ- கஸ்பா மையானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 21 குண்டுகள் முழங்க காவல் துறையினரின் முழு மரியாதையுடன் தலைமை காவலர் முரளியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் உயிரிழந்த காவலர் முரளி கடந்த 2003 ஆம் ஆண்டு காவலராக பணிக்கு சேர்ந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகாலமாக ஆம்பூர் தாலுக்கா, நகர காவல்நிலையம், உமராபாத், வாணியம்பாடி நகரம் மற்றும் கிராமிய காவல்நிலையங்களில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 7 ம் வகுப்பு படிக்கும் சஞ்சனா என்ற பெண் பிள்ளை மற்றும் 5 வது படிக்கும் லோகித் என்ற ஆண் பிள்ளையும் உள்ளனர்.