வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொடமாத்தம்மன் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளான இன்று ஆடலும் பாடலும் நிகழ்ச்சியைக் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கலை நிகழ்ச்சிக்காக 20க்கும் மேற்பட்ட அதிக சத்தம் எழுப்பக் கூடிய ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்பீக்கர்கள் மூலம் எழுப்பப்படும் சத்தமானது 75 டெசிபிலிக்கும் மேலாக ஒலி இருந்தது. தொடர்ந்து அதிக சத்தத்தை கேட்பதால் செவித்திறன் பாதிக்கப்படும் அளவிற்கு இருந்தது. ஒலி மாசினால் பொதுமக்களின் செவித்திறன் பாதிக்கப்படுவதுடன் உயர் ரத்த அழுத்தம் அதிகரித்து உயிரிழப்புக்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.
இதற்கும் மேலாக இந்த நடன நிகழ்ச்சியின் போது ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே இருதரப்பினர் இடையே மோதல் வெடிக்கவே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனையடுத்து உடனடியாக மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீசார் சமாதானம் பேசி பிரித்து அனுப்பினர். இருப்பினும் மீண்டும் மீண்டும் சண்டை அதிகரிக்கவே போலீசார் சண்டையில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து சரமாரியாக தாக்கி துரத்தி அடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் நடன நிகழ்ச்சியை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கி மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதிக திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் அமைப்பதினால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பாடும். எனவே இனி வரும் காலங்களிலாவது இதற்கான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.