Skip to main content

ரயில்வே நிலையத்தில் சிக்கிய கொத்தடிமைகள்... ஆள் கடத்தல்காரர்களை கைது செய்த காவல்துறையினர்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021
Police arrested the kidnappers

 

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் தங்க நகைகள் கடத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்கும் பணியில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் (01.09.2021) ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த வாசுதேவன், வீரகுமார், கலைச்செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்குச் செல்லும் விரைவு ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள ஐந்தாவது நடைமேடைக்கு மாலை 3 மணிக்கு வந்து சேர்ந்தது.

 

அப்போது ரயிலில் இருந்து இறங்கிவரும் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் கண்காணித்துவந்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் 7 சிறுவர்களை ரயிலில் இருந்து அழைத்துச் சென்றதைக் கவனித்த காவலர்கள், அவர்கள் அனைவரையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வட மாநிலமான உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து 13 வயது முதல் 16 வயதுடைய சிறுவர்கள் 20 பேரை கட்டட வேலைக்காக கொத்தடிமைகளாக கடத்திவருவது தெரியவந்தது. அவர்களில் 13 சிறுவர்கள் கட்டட வேலைக்காக வேறு பெட்டியில் பயணித்து இறங்கிச் சென்றுவிட்டது கண்டறியப்பட்டது.

 

அதைத்தொடர்ந்து 7 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மேலும், சிறுவர்களைக் கடத்த உடந்தையாக இருந்த ஏஜென்டுகளான ஆள் கடத்தல்காரர்கள் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் , ஷிவ் பகுஜன், சதீஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் திருச்சி, முசிறி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் கட்டட வேலைக்கு அழைத்துவருவதாக கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், எஞ்சிய 13 சிறுவர்களை மீட்கும் முயற்சியில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.