Published on 27/05/2020 | Edited on 27/05/2020
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், மே 29-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. மே 31 வரை வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை மே 29-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.