Skip to main content

“பாஜக அரசுக்கு மக்கள் பன்மைத்துவத்தின் அர்த்தத்தைப் புரிய வைப்பார்கள்” - கனிமொழி எம்.பி.

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

People will make the BJP government understand the meaning of pluralism Kanimozhi MP

 

அலுவல் மொழி தொடர்பான 38வது நாடாளுமன்றக் கூட்டம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமையடையாது என்றும், உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழியை ஏற்றுக்கொள்வோம். இந்தி எந்த ஒரு மாநில மொழிக்கும் போட்டி அல்ல. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலிமை பெறும்.

 

எந்த விதமான எதிர்ப்புமின்றி அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இல்லாமல், நல்லிணக்கம், உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக நிகழ வேண்டும். ஆட்சி மொழியை (இந்தி) ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், “பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது இந்தித் திணிப்பு. இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மக்கள் ‘பன்மைத்துவ’த்தின் அர்த்தத்தை விரைவில் புரியவைப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்