Skip to main content

பனை ஓலையில் ஆட்டுக்கறி பார்சல் - இறைச்சிக்கடைக்காரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
m1

 

அரசு எந்த சட்டம் போட்டாலும் மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றிபெறும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கிள்ளை பேரூராட்சியில் உள்ள மாமிச கடைகள் செயல்படுவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் பிளாஸ்ட்டிக் ஒழிப்புக்கு முன் உதாரணமாக இறைச்சிக் கடைகளில் பனை ஓலையில் மாமிசத்தை பொட்டலம் கட்டி தரும் பழமையான நிலைக்கு மாமிசக்கடைகாரர்கள் மாறியுள்ளனர்.

 

m2

 

கிள்ளை பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அதையடுத்து கிள்ளை பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் தவித்துள்ளனர். இதனால் நுகர்வோர்கள் துணிப்பை கொண்டு வந்து பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறியுள்ளனர். மேலும் ஓட்டல்களில் பாத்திரங்களில் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். காலை மற்றும் இரவு நேர சிற்றுண்டிகளில் வாழை இலை, சருகு, மந்தாரை, தாமரை இலையை பயன் படுத்துகின்றனர்.

 

m

 

அதேபோல் கடலூர் மாவட்டத்தின் முன் உதாரணமாக கிள்ளை பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் பழங்காலத்தில் வழங்கியது போல் பனை ஓலைகளில் மாமிசத்தை  பொட்டலம் கட்டி தருகின்றனர். இந்த பொட்டலங்களை பிச்சாவரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், அதற்கான விளக்கத்தை கேட்டறிந்து, கடை உரிமையாளர்களை பாராட்டி செல்பி எடுத்துக் கொண்டு, நினைவு பரிசும் வழங்கிச் சென்றனர்.

 

இத்தகவல் சமூக வலை தலங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதனையறிந்த சுகாதாரத்துறையினர், பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இறைச்சிக்கடையினருக்கு வாழ்த்துகூறி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...!!  

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
Mutton hall chennai

 

 

சென்னை பெரம்பூரில் மாநகராட்சி ஆட்டிறைச்சிக் கூடம் கரோனா தொற்று காரணமாக, 100 நாட்களையும் தாண்டி திறக்கப்படாததால், இந்த இறைச்சி கூடத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் நூறு நாட்களையும் தாண்டி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள், பல நாட்கள் பட்டினிக் கிடக்கிறார்கள் என்கின்றனர் அங்குள்ள வியாபாரிகள்.

 

சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபீர் அகமது மற்றும் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோரை சந்தித்தோம். 

 

அவர்கள் நம்மிடம், “கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கு நடத்தினார்கள், அன்று விடுமுறை அளித்தோம். மார்ச் 25ல் இருந்து ஏப்ரல் 14 வரை ஊரடங்கு. அந்த நேரத்தில் இறைச்சி கூடத்தை மூடச் சொல்லி எங்களை கேட்கவில்லை, நாங்களாக முன் வந்து 15 நாட்கள் இறைச்சிக் கூடத்தை மூடினோம். அதற்கு பிறகு ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை திறக்கவில்லை. கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக ஊரடங்கு தொடங்கும்போது, நாங்களாகவே 15 நாட்கள் கடைகளை மூடி வைத்திருந்தோம். தொடர் ஊரடங்கால் 100 நாட்களையும் தாண்டி கடைகள் மூடப்பட்டுள்ளது. 

 

ஆட்டிறைச்சிக் கடைகளில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மாட்டிறைச்சி கூடங்களில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் இந்த இறைச்சி கடைகளை நம்பி ரிக்க்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்குபவர்கள், வெளியூரில் இருந்து ஆடு கொண்டுவருபவர்கள் உள்ளனர். இது இல்லாமல் 3,242 ஆட்டிரைச்சி கடைகளுக்கு சென்னை மாநகராட்சி லைசென்ஸ் கொடுத்துள்ளது. இதில் 90 சதவீத இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்துதான் இறைச்சி செல்கிறது. மாட்டிறைச்சியை பொறுத்தவரை நூறு சதவீதம் இங்கிருந்துதான் செல்கிறது. சைதாப்பேட்டை போன்ற இடங்களில் 40, 50 ஆடுகள் அறுக்கும் கூடங்கள் உள்ளன. அது அந்தந்த பகுதிகளுக்கு தேவைக்கு பயன்படும். ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுக்க வேண்டுமென்றால் இங்குதான் வர வேண்டும். அந்த அளவுக்கு வசதிகளும், தொழிலாளர்களும் உள்ள இடம் இது. 

 

தினந்தோறும் அதிகாலை மூன்றரை மணிக்கு வரும் தொழிலாளர்கள், வேலை முடிந்துதான் செல்வார்கள். அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள். இந்த தொழிலாளர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். 

 

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், வியாபாரிகளையும், சில்லரை வியாபாரிகளையும் காப்பாற்ற உடனடியாக இந்த இறைச்சி கூடங்களை திறக்க அனுமதிக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். 

 

 

chennai

 

கரோனா காலத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று சொல்லுங்கள், அதனை நாங்கள் பின்பற்றுகிறோம். முக கவசம் அணிவது, கையுறை அணிவது, மாநகராட்சி என்னென்ன சொல்கிறதோ அதனை முழுமையாக கடைப்பிடிக்கிறோம் என நாங்கள் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்துவிட்டோம். 

 

மண்டல அலுவலகத்திற்கு போனால், 'எங்களுக்கு அதிகாரம் இல்லை' என்கிறார்கள். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றால் 'உங்கள் மனுவை மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறோம், அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை' என்கிறார்கள். இந்த இறைச்சி கூடத்திற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய விஓ,  'எங்களுக்கு அதிகாரம் இல்லை, கமிஷ்னர் தான் ஆர்டர் போடணும்' என்கிறார்கள். 

 

 

chennai

                                  ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபீர் அகமது

 

கமிஷ்னர் அலுவலகத்திற்கும் சென்றோம். அங்கும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இங்குள்ள கடைகளை இரண்டு பகுதியாக பிரித்து, பாதி வியாபாரிகளையும், பாதி தொழிலளார்களை ஒரு நாள் வேலை செய்ய விடுவது, மறுநாள் அந்த கடைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறைவிட செய்து, மீதி பாதி வியாபாரிகளையும், பாதி தொழிலளார்களை அடுத்த நாளில் பணி செய்ய விடலாம், இதுபோன்ற சுழற்றி முறையில் செய்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், அதிக கூட்டம் கூடாது என்றோம். 

 

நாங்களே முன்வந்து இன்னொன்றும் சொன்னோம். ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுக்கு வியாபாரமே. அந்த ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் விடுமுறை விட்டுவிடுகிறோம் என்று சொன்னோம். அரசு கடந்த ஒரு மாதமாகத்தான் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என சொல்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் கடைகளை மூடுகிறோம் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆணையர், இணை ஆணையர் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்திருக்கிறோம். 

 

mmmm

 

இது இல்லாமல் நாங்களே ஒரு குழு அமைத்திருக்கிறோம். அந்த குழுவினர், கடைக்கு வருபவர்கள் மற்றும் கடையில் உள்ளவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது, கையுறை அணிவதை கடைப்பிடிக்கிறார்களா, கடைப்பிடிக்கவில்லை என்றால் கடைப்பிடிக்க அவர்கள் அறிவுறுத்துவார்கள் என்பதையும் எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்திருக்கிறோம். அதிகாரிகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை. 

 

கடைசியாக பேச்சுவார்த்தையில் இறைச்சிக் கூடத்திற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய விஓ, பாதி கடைகளை திறந்து, பாதி தொழிலாளர்களை வைத்து இறைச்சி கூடத்தை நடத்தலாம் என்றார். அதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். 

 

மாநகராட்சி ஆணையரை நாங்கள் நான்கு முறை சந்திக்க சென்றோம். ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம், இரண்டு மணி நேரம் என உட்கார்ந்து காத்திருந்தோம். விசிட்டிங் கார்டு வாங்கிக்கொள்கிறார்களேயொழிய மாநகராட்சி ஆணையரை சந்திக்க முடியவில்லை. எங்களை சந்திக்காமல் நிராகரித்துவிட்டார். என்ன காரணத்திற்காக சந்திக்காமல் நிராகரிக்கிறார் என தெரியவில்லை. ஒரு நிமிஷம் எங்களை சந்தித்து, என்ன காரணத்திற்காக இறைச்சிக் கூடம் திறக்கவில்லை. எப்போது திறப்போம், என்ன திட்டம், யோசனை ஏதாவது தெரிவிக்கலாம். எந்த பதிலும் அளிக்கவில்லை. எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.

 

118 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறைச்சிக் கூடம் ஆங்கிலேயர் காலத்தில் பெரம்பூரில் 1903ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த இறைச்சிக்கூடத்தில் தலைமுறை தலைமுறையாக பணியாற்றி வருகிறார்கள். இந்த இறைச்சிக் கூடத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானவர்கள், நூறு நாட்களையும் தாண்டி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். பட்டிணிக் கிடக்கிறார்கள். அத்தனைப் பேரும் அன்றாடம் சம்பாதித்து சாப்பிடக்கூடிய தொழிலாளர்கள். சில்லரை வியாபாரியும் தினக்கூலித் தொழிலாளர்களைப் போலத்தான். 

 

இன்று காலை தொழிலாளர்கள், வியாபாரிகள் எல்லாம் ஒன்று கூடி எங்களுக்கு ஏதாவது பதில் சொல்லுங்கள் என்றோம். இந்த ஏரியாவின் இந்த ஜோனல் எக்ஸ்கியூடிவ் இன்ஜினீயர், புளியந்தோப்பு காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் வந்திருந்தார்கள். மாலைக்குள் அதிகாரிகளுடன் பேசி முடிவை சொல்கிறோம். கலைந்து செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்கள். நாங்களும் கலைந்து சென்றோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர் நம்பிக்கையுடன். 

 

 

Next Story

சேலத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்; பழைய கறி 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

சேலத்தில் கெட்டுப்போன, பழைய ஆட்டிறைச்சியை 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுவது, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது.


ஆட்டிறைச்சி தற்போது கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சேலம் சூரமங்கலம், சித்தனூர், கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆட்டிறைச்சி கிலோ 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் கதிரவனுக்கு தகவல் கிடைத்தது. 

 Confiscation of spoiled mutton fssai officers raid in salem district

இதையடுத்து அவர் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை 07.00 மணியளவில், புகாருக்குள்ளான இறைச்சிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் பார்த்திபனும் சோதனையில் ஈடுபட்டார். வெளியூர்களில் இருந்து பழைய இறைச்சியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தும், சிலர் கெட்டுப்போன இறைச்சியையும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. 


இந்த சோதனையில், பழைய மற்றும் கெட்டுப்போன ஆட்டிறைச்சி 245 கிலோ பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. சில கடைகளில் அறுப்புக்காக வைத்திருந்த நோய்வாய்ப்பட்ட ஆடுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உணவுப்பாதுகாப்பு உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 35 இறைச்சி கடைகளுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப்பட்டது.


விரைவில், சேலம் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளிலும் இதுபோன்ற அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என்று உணவுப்பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.