![OVERSEAS TAMILERS UNION GOVERNMENT CHENNNAI HIGH COURT](http://image.nakkheeran.in/cdn/farfuture/g2WuZ-dduQfGVkrA2LNBIzAXI2YWtTZuPVWLwpCELTQ/1594115455/sites/default/files/inline-images/ch3_45.jpg)
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 25,939 தமிழர்களை, தமிழகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க, மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி, தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன், ராஜா முகமது என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இன்று (07/07/2020) இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் 26 ஆயிரம் பேரை மீட்க 146 விமானங்கள் தேவைப்படும் நிலையில், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என, தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். மேலும், இந்தியத் தூதரகத்தில் உள்ள இந்திய சமூக நல நிதியம் மூலமாக, வெளிநாடுகளில் பசியாலும் வறுமையாலும் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், தமிழக விமான நிலையங்களில் தமிழர்கள் வந்து இறங்காததாலேயே, அவர்கள் தமிழகம் திரும்பவில்லை எனக் கூற முடியாது. ஏராளமான தமிழர்கள் மற்ற மாநில விமான நிலையங்களுக்கு மும்பை வழியாகச் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். மேலும், இதுவரை வெளிநாடுகளில் சிக்கி இருந்த 43% தமிழர்கள் தமிழகம் திரும்பிவிட்டனர். ஜூலை 3- ஆம் தேதி முதல் ஜூலை 11- ஆம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களைத் தமிழகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இந்திய சமூக நல நிதியம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 20- ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.