
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றுள்ளார். அங்கு ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார். சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் தொடர்ச்சியாக மாலை 6 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். கீழடி அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வுகள் நடந்துள்ளன. 8 கட்ட அகழ்வாய்வினையும் சேர்த்து 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் யாவும் அருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.