Skip to main content

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மீது போலீஸ் எஸ்ஐ சரமாரி தாக்குதல்! வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு!!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் சவாரிக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீஸ் எஸ்ஐ ஒருவர் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆறு தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். 

 

police

 

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (39), ரத்தினபிரகாஷ் (42), ராகுல் (17), கார்த்திக் (19) உள்பட 14 பேர் கொண்ட ஒரே குடும்பத்தினர், செப். 24, 2018ம் தேதியன்று ஒகேனக்கல்லுக்கு சுற்று வந்திருந்தனர். காவிரியில் நீர் வரத்து அதிகரித்ததால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் காலை 11 மணியளவில், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். முருகேசன் உள்பட ஏழு பேர் மட்டும் பரிசலில் செல்ல விரும்பினர். இதற்காக அவர்கள் ஒரு பரிசலில் ஏறினர். அப்போது பரிசல் ஓட்டிகள், ஒரு பரிசலில் 4 பேர் மட்டுமே செல்ல முடியும் என்று கூறினர். ஆனால் முருகேசன் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஏழு பேரையும் ஒரே பரிசலில் அட்ஜஸ்ட் செய்து அழைத்துச் செல்லும்படி கூறினார். 

 

 

இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்குள்ள ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒரு காவலர், அவர்களை சமாதானப்படுத்தினார். 

 

police

 

அதற்கு முருகேசன், தான் ஒரு வக்கீல் என்றும், ஊர்க்காவல் படை காவலருக்கெல்லாம் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறி அவருடனும் வாக்குவாதம் செய்தார். மேலும், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த்துறை ஊழியர்கள் சிலரும் முருகேசனை சமாதானப்படுத்தி முயற்சித்தனர். அவர்களிடமும் தகராறு செய்துள்ளார் முருகேசன். 

 

 

இதுகுறித்து பரிசல் ஓட்டிகள், ஊர்க்காவல் படை காவலர் ஆகியோர் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீஸ் எஸ்ஐ மாரி மற்றும் சில போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விசாரணையில் முருகேசன், சென்னையில் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. 

 

 

மேலும், எஸ்ஐ மாரியுடனும் அவர் தகராறில் ஈடுபட்டார். அதனால் ஆத்திரம் அடைந்த எஸ்ஐ மாரி லத்தியால் முருகேசன் மற்றும் அவருடன் வந்த சிலரை திடீரென்று சரமாரியாக தாக்கினார். இதில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள்தான் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் இரண்டு நாள்களாக வேகமாக பரவி வருகின்றன.

 

 

பின்னர் முருகேசன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு முருகேசன், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 

 

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதரிடம் கேட்டபோது, ''இது ஒரு பெரிய சம்வமே இல்லை. பிரச்னை செய்தவர்களில் சிலர் அன்று மது போதையில் இருந்தனர். உண்மையில், பரிசலில் 4 அல்லது ஐந்து பேருக்கு மேல் ஏறக்கூடாது. ஆனால் அவர்களில் 7 பேர் ஒரே பரிசலில் ஏறினர். அதை அங்கிருந்த பரிசல் ஓட்டிகளும், வருவாய்த்துறை ஊழியர்களும் எச்சரித்துள்ளனர். அதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

police

 

தகவல் அறிந்து, அதை தடுக்கச்சென்றபோதுதான் போலீசாரையும் அந்த கும்பல் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.  குடிபோதையில் அவர்கள் போலீஸ் எஸ்ஐ மீது கைவைத்து தள்ளிவிட்டனர். அப்போது தற்காப்புக்காக எஸ்ஐ அவர்களை தாக்க நேர்ந்தது. அதில் உள்நோக்கம் ஏதுமில்லை. 

 

 

போலீசாரை தாக்கினால் வழக்கமாக 'ரிமாண்டு' செய்வோம். ஆனால் அன்று அவர்கள் குடிபோதையில் இருந்ததாலும், உடன் பெண்கள் இருந்ததாலும் அவர்களை சிறிது நேரம் போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டோம். போலீசார் தாக்கிய காட்சிகளை மட்டும் எடிட் செய்து வாட்ஸ்அப்பில் சிலர் வீடியோவை பகிர்ந்துள்ளனர். போலீசாரை அவர்கள் தாக்கியதை மறைத்துள்ளனர். 

 

 

கடந்த ஒரு வாரத்தில் லட்சம் பேர் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் பலர் மது போதையில் இருக்கலாம்.... மற்றவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை போலீசார் தாக்கலாம்... இப்படி தினமும் ஏதோ ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கும். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.