Skip to main content

நவராத்திரி விழா: பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள்! (படங்கள்)

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

 

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் அந்த சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரிவிழா கொண்டாடப்பட்டது. பின்னர் 1840- ஆம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா, கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இங்கிருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக அங்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி வந்ததையடுத்து, கேரளா மற்றும் தமிழ்நாடு பிரிந்ததையடுத்து பின்னர் குமரி மாவட்டமும் தாய் தமிழ்நாடோடு 1954- ல் இணைந்த பிறகும் இந்த நவராத்திரி விழா நிறுத்தப்படாமல், கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில நல்லுறவை ஏற்படுத்தும் விழாவாக மாறியது. இதையடுத்து, இந்த நவராத்திரி விழா இன்று வரை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 

 

இதற்காக கன்னியாகுமரி மாவட்டம், சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி விக்கிரங்கள் பத்மநாபபுரம் அரண்மனை வாயிலில் பல்லக்கில் வைத்து இரு மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், வருவாய்துறை, தேவசம்போர்டு மற்றும் தொல்லியல் துறை அதிகாாிகள் காவல்துறை அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள்  மற்றும் ஆயிரகணக்கான பொதுமக்கள் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு மன்னரின் உடை வாளை மாற்றி இரு மாநில போலீசாரின் அணி வகுப்பு மாியாதையுடன் சுவாமி விக்கிரங்களுடன் கூடிய பல்லக்கை பக்தர்கள் தோளில் சுமந்தபடி யானையுடன் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. 

 

அப்போது 56 கி.மீ தூரம் வழி நெடுகிலும் சாலைகளின் இரு பக்கங்களிலும் கொடி, தோரணங்கள் கட்டி பக்தா்கள் வரிசையாக நின்று திருக்கன் சாா்த்தி ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். மேலும் அன்னதானங்கள் வழங்கி ஒரு விழா கோலம் போல் பூண்டு பெரும் விமர்சையாக இருக்கும்.

 

இந்த நிலையில் கரோனாவை காரணம் காட்டி கடந்த ஆண்டை போல் பக்தர் இல்லாமல் எளிமையாக நவராத்திரி விழாவை நடத்த இரு மாநில அரசுகளும் முடிவு செய்தன. இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தொிவித்தன. இதையடுத்து, அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவாா்த்தையடுத்து பக்தர்கள் கூட்டம் மற்றும் யானை ஊர்வலம் இல்லாமல் விழா நடத்த அனுமதிக்கபட்டது.

 

இதையடுத்து இன்று (03/10/2021) நவராத்திரி விழா கரோனா கட்டுப்பாடுகளுடனும், குறைவான பக்தர்கள் அனுமதியுடனும் நடந்தது. இதில் மத்திய இணையமைச்சர் முரளிதரன், கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவன்குட்டி, கல்வித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இதையடுத்து, திருவனந்தபுரத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் சுவாமி விக்கிரங்கள், வருகிற அக்டோபர் 6- ஆம் தேதி திருவனந்தபுரம் கோட்டையகம் நவராத்திரி மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பூஜையில் வைக்கபடுகிறது. அதிலிருந்து 10- ஆவது நாள் நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தது ‘2024’ புத்தாண்டு; நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Born '2024' New Year Kolakala celebration all over the country

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதலே களைகட்டி வந்தது. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதே சமயம் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. நக்கீரன் வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

Next Story

ஆஸ்திரேலியாவில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்!

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
People welcomed the New Year with spectacular sky fun in Australia

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் நகரில் மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை ஆஸ்திரேலிய மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.