Skip to main content

"உயர்நீதிமன்றத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்" - அமைச்சர் ரகுபதி

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

minister raghupathy talks about high court request 

 

கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்து வழக்கை துவக்கி வைத்தனர். அதனையடுத்து குளித்தலை பெரிய பாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழா நடைபெற்றது. விழாவில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்திற்கான கல்வெட்டையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

 

அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேசுகையில், "தமிழகத்தில் அனைவரும் சமம். அனைவருக்கும் சமத்துவ நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், சதி செய்கிறார்கள். நீதிமன்றங்களுக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒப்பற்ற சமத்துவ நீதி ஆட்சியினை வழங்கி உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்றங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்துள்ளோம். மேலும், உயர்நீதிமன்றம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து நிறைவேற்றி தருவோம்" எனக் கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா பேசுகையில், “கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 19 நீதிமன்றங்கள் உள்ளன. தற்போது இருபதாவது நீதிமன்றமாக குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழக்கூடியவர்களாக உள்ளனர். கரூர் மாவட்டத்தில்தான் குறைந்த நிலையில் 19 போக்சோ வழக்குகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 356 வழக்குகள், விருதுநகர் மாவட்டத்தில் 39 வழக்குகள் என அதிகமாக உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் 19 வழக்குகள் எனக் குறைந்த நிலையில் உள்ள போதிலும், நான் மாவட்ட பொறுப்பு நீதிபதியாக பணியாற்றிய போது 7 போக்சோ வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. அதனை ஒரு வருடக்காலத்தில் மகிளா நீதிமன்ற நீதிபதி குறைந்த காலத்தில் வழக்குகளில் உரிய விசாரணை மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும். வழக்குகளை விரைந்து விசாரித்து தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் போக்சோ வழக்கு இல்லாத மாவட்டமாக கொண்டு வர வேண்டும்.

 

வழக்கறிஞர்கள் வழக்கின் தன்மையை உணர்ந்து நீதிபதிகளின் கேள்விகளுக்கு தகுந்த பதிலை அளித்தும் வாதாடும்போது வழக்கு விசாரணையை விரைவில் முடித்து நீதிபதி தீர்ப்பினை வழங்க முடியும். எனவே, வழக்கறிஞர்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும். மூத்த வழக்கறிஞர்தான் அட்வகேட் ஜெனரல் எனவும், இந்தியாவில் அட்டர்னி ஜெனரல் எனவும் அழைக்கப்படுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கினை மூத்த வழக்கறிஞர் ஒருவர் தான் வாதாடி நல்ல தீர்ப்பினை பெற்று தந்தார். எனவே, மூத்த வழக்கறிஞர்கள் வயது மூப்பினை கருத்தில் கொள்ளாமல் உரிய நீதியினை வழங்குவதற்காக நீதிமன்ற வழக்குகளில் வாதாடி வெற்றியைத் தேடித் தர வேண்டும்" என்று கூறினார்.

 

மூத்த வழக்கறிஞர்கள் 5 நபர்களுக்கும் நீண்ட நாட்களாக வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் நன்கு வாதாடக்கூடிய 40 வழக்கறிஞர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நீதிமன்ற பொறுப்பு  நீதிபதி குமரேஷ் பாபு, மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், எஸ்.பி சுந்தரவதனம், டி.எஸ்.பி ஸ்ரீதர், கோட்டாட்சியர் புஷ்பா தேவி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் கரூர் மாவட்டம் மாரப்பன், குளித்தலை கிளை சாகுல் அமீது  மற்றும்  நீதிமன்ற ஊழியர்கள் எனப்  பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்