
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் கொலைகாரன் குடியிருப்பு பழனியாண்டி மகன் சக்திவேல்(50). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தினசரி தனது வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளின் சாணங்களை சேகரித்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு கொண்டு சென்ற உரமாக போட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் சாணங்களை சேகரித்து தனது தோட்டத்திற்கு எடுத்து சென்ற போது முதல் நாள் இரவு காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தின் வழியாக மரங்களுக்கு இடையில் சென்ற மின் கம்பிகளில் ஒரு மின் கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் சக்திவேல் மிதித்துள்ளார். இதையடுத்து மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்து கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த நிலையில், தகவலின் பேரில் அமைச்சர் மெய்யநாதன் சக்திவேலின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அரசின் உதவி நிவாரணம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து சென்றார்.
இந்த நிலையில் நேற்று சக்திவேல் வீட்டிற்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன், விவசாயி சக்திவேல் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான, அரசு நிவாரணத் தொகைக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.