
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட இறையூர் காலனி, தொளார் காலனி, கொடிக்களம் காலனி, ஆவினங்குடி காலனி, ஆதமங்கலம் (சாத்தநத்தம் காலனி) ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3-ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு 682 பயனாளிகளுக்கு ரூ.3.59 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண் குழந்தைகள் படித்தால் தான் ஒரு குடும்பம் முன்னேறும், ஒரு குடும்பம் முன்னேறினால் ஊர் முன்னேறும், ஊர் முன்னேறினால் நாடு முன்னேறும் என்பதை நன்கறிந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தினை துவக்கிவைத்ததன் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 மாணவிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினையும் செயல்படுத்திவருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை எளிமைப்படுத்தும் வகையிலும், அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற சிறப்பு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இதில் கடலூர் மாவட்டத்தில் 91 முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது. முகாம் 3-ஆம் கட்டம் என்ற சிறப்புத்திட்டத்தினை ஊரகப்பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளார்” என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலவலர் ம.இராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் இரா.சரண்யா இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, தாட்கோ அலுவலர் லோகநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விருத்தாசலம் முருகன், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் உதயகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.