Skip to main content

போராட்டத்தை அறிவித்த அதிமுக..! களத்திற்குச் சென்ற அமைச்சர் துரைமுருகன்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

Minister Duraimurugan who went to the Mullai Periyar Dam for inspection

 

தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக முல்லை பெரியார் அணை உள்ளது. 152 அடி உயரமுள்ள இந்த அணையில், 1979ஆம் ஆண்டு கேரள அரசு 136 அடியாக நீர் தேக்க அளவைக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, பல்வேறு நிபுணர்கள் குழு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்து கடந்த 2014ஆம் ஆண்டு 142 அடி வரை தண்ணீரை தேக்க அனுமதி அளித்தது. மேலும், பேபி அணையைப் பலப்படுத்திய பின் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது. மேலும், அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவும் அவர்களுக்கு உதவ ஒரு துணை குழுவும் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கடந்த 2014, 2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 142 வரை தேக்கப்பட்டது.

 

தற்போது, கேரளாவிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்துவருவதால் இந்த ஆண்டு மீண்டும் 142 அடி வரை தேக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கேரள அரசு தொடர்ந்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று (04.11.2021) தீர்ப்பளித்த நீதிமன்றம், தொடர் மழை பெய்துவருவதால் நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை 139.50 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்றும், அதற்குப் பிறகு 142 அடியாக ஏற்றிக்கொள்வதில் தடையில்லை எனவும் உத்தரவிட்டது. 

 

Minister Duraimurugan who went to the Mullai Periyar Dam for inspection

 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்ததை மீறி முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், இடுக்கி மாவட்ட கலெக்டர் சிபா ஜார்ஜ், பீர்மேடு எம்.எல்.ஏ. வாலூர் சசோமன் மற்றும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்று அணையின் பகுதிகளைப் பார்வையிட்டு கேரள போலீசாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். அதன்பிறகு கேரள மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி காலை 7 மணி அளவில் அணைப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் அம்மாநில அதிகாரிகள் பெரியாறு அணையில் 3 மற்றும் 4வது மதகைத் திறந்து தண்ணீரை உபரியாக வெளியேற்றினர். மொத்தம் உள்ள 13 மதகுகளில் இரண்டு மதகுகள் வழியாக வினாடிக்கு 34 கன அடி நீர் திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் 139.50 அடி வரை தேக்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டு, 29ஆம் தேதி காலை 138.70 அடியை எட்டியிருந்தபோதே தண்ணீர் திறக்கப்பட்டது கண்டு தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

அதனால், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக, ‘முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், சில காரணங்களால் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும், அணை பலவீனமாக இருக்கிறது, உடைய வாய்ப்பிருக்கிறது போன்ற அவதூறுகளைக் கேரளாவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டும், கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் அணையில் 142 அடி வரை தண்ணீரை தமிழக அரசு தேக்கி வைக்காமல் உள்ளது. இந்நிலையில், 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்று கோரி அதிமுக வரும் 9ஆம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும்’ என்று அறிவித்திருந்தது.  

 

Minister Duraimurugan who went to the Mullai Periyar Dam for inspection

 

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இதுகுறித்து நிலையான வழிகாட்டுதலின்படி கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மதகுகள் திறக்கப்படும்போது கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சரும் மற்றும் சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ கேரள அரசின் அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்று பரப்பப்பட்டுவருகிறது என்று விளக்கம் அளித்திருந்தார். அதேபோல், இன்று (5ஆம் தேதி) முல்லை பெரியாறு அணையை ஆய்வுசெய்ய இருப்பதாகவும் முன்கூட்டியே தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில் இன்று காலை முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் படகில் சென்று அணையின் மதகு உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ய இருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.