![minister anbil mahesh poyyamozhi celebrated pongal festival in trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/nt2AfqsDbQXZiw7sEUDW5Q4gYKTOMiOGBJtN5xbG1vU/1673681224/sites/default/files/inline-images/trichy-dmk-pongal-art.jpg)
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் களைக்கட்டியுள்ள நிலையில், திருச்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பாகத் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திமுகவின் திருச்சி கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு. மதிவாணன் முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கழகத்தின் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அப்போது அங்கு இருந்த மகளிர் அணி தொண்டர்கள் பொங்கல் பொங்கி வரும்போது குலவை சத்தத்துடன் கும்மி பாட்டும் பாடினர்.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொங்கல் பரிசு வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார். இந்நிகழ்வில் திமுகவின் கழக நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.