கரோனா கொள்ளை நோய் கொடூர பாதிப்பிலிருந்து கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் மட்டும் இயலாது. அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல ஆர்வலர்கள் மனிதாபிமானத்துடன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், அவசரகால உதவிகள் ஆகியவற்றை நேரடியாகக் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கத்தோடு, நேற்று முன்தினம் (12/04/2020) தமிழக அரசு ஒரு அறிவிப்பைச் செய்தது.
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பின் விளைவாகத் தமிழக அரசு நேற்று (13/04/2020) மழுப்பலான ஒரு அறிக்கையை வெளியிட்டு, அரசாங்கத்தின் மூலமாகத்தான் உதவ வேண்டும் என்ற நோக்கத்தை மறுபடியும் வெளிப்படுத்தி உள்ளது.
எனவே மேற்கூறிய நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், வருவாய்த் துறை செயலாளருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அத்துடன் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தானே வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றப் பதிவுத் துறையிடம் முறையிட்டுள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.