Skip to main content

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விலை ஏறுகிறது... விவசாயிகளுக்கு விலை குறைகிறது... மஞ்சள் விவசாயிகள் வேதனை!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

Prices are going up for corporate companies ...! Farmers' product prices fall ...! Turmeric farmers suffer


ஈரோடு என்றால் ஜவுளிக்கு அடுத்தபடியாக 'மஞ்சள்' பிரதானமானது. மஞ்சள் மாநகரமாக திகழும் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலும் மஞ்சள் பயிரை அதிகமாக சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில், ஆண்டுக்கு தொடர்ந்து 10 மாதங்கள் தண்ணீர் திறக்கப்படுவதால், அந்தப் பகுதிகளில் மஞ்சள் சாகுபடி அதிகமாகச் செய்யப்படுகிறது. மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளதும், ஈரோடு மஞ்சள் தரமாக இருப்பதாலும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பலர் ஈரோடு மார்கெட் வந்து  மஞ்சளை அதிகமாகக் கொள்முதல் செய்து வந்தனர்.

பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம், ஈரோடு செம்மாம்பாளையம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த மார்க்கெட்டுகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மஞ்சளின் விலை குறைவாகவே காணப்பட்டது. ஒரு குவிண்டால் சுமார் ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மஞ்சளின் விலை குறைவாக இருந்ததால் விவசாயிகள் தங்களது மஞ்சளை விற்பனைக்காக கொண்டு செல்வதில் தயக்கம் காட்டிவந்தனர்.


கரோனா பாதிப்பு காரணமாக சில நாட்கள் மஞ்சள் ஏலம் நடக்காமல் இருந்துவந்தது. கிருமி நாசினியாக மஞ்சள் இருப்பதால், கரோனா பாதிப்புக்கு பிறகு, மஞ்சளின் விற்பனை சூடுபிடிக்கும் என்றும், அதனால் விலையில் ஏற்றம் ஏற்படும் என்றும் விவசாயிகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாகக் கடந்த சில நாட்களாக மஞ்சளின் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துவருவது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தொடர்ந்து விலை குறைந்துகொண்டே வந்ததால் விவசாயிகள் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு வருவதையும் தவிர்த்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூட மார்க்கெட்டுக்கு 1,000 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது மஞ்சளின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஏலத்துக்கு 489 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்டது. இதில் 395 மூட்டைகள் விற்பனையானது. மேலும், ஒரு குவிண்டால் தனி விரலி மஞ்சள் ரூ.5,056 முதல் ரூ.5,959 வரையும், தனி கிழங்கு மஞ்சள் ரூ.4,961 முதல் ரூ.5,966 வரையும் விலைபோனது. மஞ்சளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயக் குடும்பங்கள் பெரும் கவலை அடைந்துள்ளது.

 

இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் சிலர் கூறும்போது, "கரோனா பாதிப்பு காரணமாக திருவிழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்காமல் உள்ளது. இதனால் மஞ்சளின் தேவையும் குறைந்து இருக்கலாம். மேலும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் அனுப்பி வைக்கப்பட்டுவந்தது. ஆனால், இலங்கையில் வெளிநாட்டில் இருந்து மஞ்சள் கொள்முதல் செய்யத் திடீர் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

அங்கு கொண்டு செல்லப்படும் மஞ்சளை சோதனைச் சாவடி அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து, அந்த மாநில அரசு சார்பில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,800க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மஞ்சள் தற்போது ஏலம் முறையில் அந்த அரசு விற்பனை செய்கிறது. இதில் ஒரு குவிண்டாலுக்கு மார்க்கெட் விலையில் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. 

 

Ad


இந்த மஞ்சளை மற்ற மாநில வியாபாரிகள் வாங்குவதால் ஈரோடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தீபாவளி பண்டிகையின்போது நுகர்வு அதிகரித்தால் மஞ்சளின் விற்பனையும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். அவசரப் பண உதவி தேவைப்படும் விவசாயிகள் மட்டும், மஞ்சளை விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். விலை கிடைக்கும் நம்பிக்கையில் மஞ்சளை விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள்.

 

இதனால் தரமான மஞ்சள் விற்பனைக்கு வரும்போது, விலையும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் எங்களுக்குள்ள சந்தேகம் சர்வதேச வணிகமாக உள்ள தங்கம், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் விலையேற்றம் இருந்து கொண்டே இருக்கும் போது உணவு மற்றும் மருத்துவப் பொருளான மஞ்சள் மட்டும் எப்படி விலை குறைகிறது ? கார்பரேட் கம்பெனிகளின் பொருட்கள் விலை ஏறுகிறது. உழைப்பின் மூலம் விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு மட்டும் உரிய விலை கிடைப்பதில்லை." என வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்