Skip to main content

அரசியல் பார்வையில் மகாபுஷ்கர விழா!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

1874-ம் ஆண்டுக்குப் பின் 144 ஆண்டுகள் கழிந்து கொண்டாடப்படுகிற நெல்லை தாமிரபரணி மகாபுஷ்கர விழா. யானை தன் பலம் அறியாது. அது போன்றே அஷ்டமா சித்திகளையும், உள்ளடக்கிய தாமிரபரணி தன் அருமை பெருமையறியாத அடக்கமானவள். தென்மாவட்ட மக்களின் ஊன் உயிர், ரத்தமும் சதையுமாக ஒவ்வொரு உயிரிலும் ஊடுருவி நிற்பவள் புண்ணிய தாமிரபரணி.

 

mahapushkar

 

மாமுனிகளில் விஸ்வரூபமெடுக்கும் விஸ்வாமித்திரருக்கு அடுத்த நிலையிலிருப்பவர் தவமுனி வியாசர். அவர் முனிவர் மட்டுமல்ல புராண இலக்கியங்களின் ஆதி குரு.  ஒரு முறை தென்பொதிகையிலிருந்த அகத்திய மாமுனிவரை வியாசர் எதிர் கொண்டபோது, முனிவரே, பலரின் சாபத்திற்கு ஆளான நீர், சாபக்கறை உடையவரானீர். அதனைப் போக்க இதோ ஓடுகிற தாமிரபரணியில் மூழ்கியெழுந்து வருக சாபம் நீங்கி பிறவிப் பயனை அடைவீர் என்றிருக்கிறார்.

 

அகத்தியர் சர்வேஸ்வரனிடமிருந்து அருட்கண் பெற்றவராயிற்றே. அவரின் வார்த்தைகள் பொய்க்காது. ஒரு கணம் சிந்தித்தவர். தாமிரபரணி பாய்கிற பீட பூமியான தீர்த்தம்பதியில் மூழ்கி எழுந்தார். கரையேறிய அம் மாமுனி தற்செயலாக திரும்பிப் பார்க்கையில் மூன்று பெண்கள் அதில் மூழ்கி நீராடியிருக்கிறார்கள்.

 

mahapushkar

 

நீராடியவர்கள் கங்கா, யமுனா, காவேரி மூன்று ஆறுகளின் பெண் தெய்வங்களே என்பதை தன் ஞானக்கண்ணால் அறிந்து அதிர்ந்தவர். வற்றாமல் ஓடுகிற புண்ணிய நதி தெய்வங்களே. நீங்களா இங்கு நீராடுவது அவர்களைக் கண்டு வியந்திருக்கிறார் மாமுனி.

 

முனி பெருமானே, தங்களின் பாவங்களைக் களைய அன்றாடம் மக்கள் எங்கள் நதிப்பரப்பில் மூழ்கி விமோசனமடைகின்றார்கள். அப்படி களையப்பட்ட அவர்களின் பாவ மூட்டைகளின் அழுத்தத்தை எங்களால் தாங்க முடியவில்லை. அதைப்போக்கவே நாங்கள் தாமிரபரணி மகா புஷ்கரத்தில் நீராடினோம் என்றிருக்கிறார்கள்.

 

இந்த நிகழ்வுகளை தன் பதியத்தில் குறிப்பிட்ட வியாசர், நதிகளின் பிரதான தேவதை என்று தாமிரபரணியைக் கொண்டாடியிருக்கிறார்.

 

mahapushkar

 

அத்தகைய பெருமையோடு பிறப்பெடுத்து, அந்த மாவட்ட மக்களுக்கு உயிருட்டி விட்டு அங்கேயே தன்னை மாய்த்துக் (கடலில் சங்கமித்து) கொள்கிற தாமிரபரணியின் மகாபுஷ்கர விழா வரும் அக் 11 முதல் 23 வரை கொண்டாடப்படுகிறது. இதில் அக் 04-ல் குருபகவன் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாவது கூடுதல் சிறப்பு. அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், வாயு தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், துர்க்கா தீர்த்தம் என்று தாமிரபரணி பாய்கிற வழியெங்கிலும் உள்ள தீர்த்தங்களில் லட்சக் கணக்கில் மக்கள் புனித நீராடுவார்கள். அதன் பொருட்டு இந்து மற்றும் ஆன்மீக அமைப்புகள் அதற்கான விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.

 

mahabuskar

 

இந்த நிலையில் தாமிரபரணியின் குறுக்குத்துறை முருகன் ஆலயத்தின் தீர்த்தவாரிக்குட்பட்டது. அடுத்து அதன் தைப்பூச படித்துறை மண்டபம் பாதுகாப்பு அற்றது என்பதால் அங்கு நீராட இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர் பரஞ்ஜோதி தடை விதிக்க, அதனை எதிர்த்து இந்து முன்னணியின் மாநில செயலர் ஜெயக்குமாரின் தலைமைய போராட்டமும் நடைபெற்றது.

 

mahapushkar

 

இந்தச் சூழலில் இந்து மக்கள் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவரான உடையாரின் தலைமையில், புஷ்கர விழாவிற்கு நாட்டின் முக்கியத் தலைவர்கள் பலர் வர இருப்பதால் தகுந்த பாதுகாப்புடன் படித்துறைகள் சீரமைக்கப்பட வேண்டும். மக்கள் நலன் கருதி தடையை நீக்க வேண்டும் என்று அறநிலையத்துறையிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள்.

 

அதேசமயம், நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவரான சங்கரபாண்டியன் தலைமையில் மாவட்டக் கலெக்டர் ஷில்பா விடம் கொடுத்த மனுவில்.

 

குறுக்குத்துறை தைப்பூச மண்டபப் படித்துறைகளில் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது ஆழமான பகுதி எனக் கருதுவதால் அதனைச் சரி செய்து மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இந்த இரு படித்துறைகளுக்கும் அனுமதி மறுத்திருப்பதைக் காரணம் காட்டி பா.ஜ.க.வும், இந்து முன்னணியும் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். எனவே அவர்கள் அரசியல் செய்வதற்கு இடமளிக்காமல், மக்களின் நலன் கருதி இரு படித்துறைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.

 

mahapushkar

 

காந்தி பிறந்த நாளில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதற்கு அனுமதி வழங்கக் கூடாது அனுமதி கொடுத்தால் காங்கிரஸ் சார்பில் அறுசுவை உணவுடன் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

தாமிரபரணி புஷ்கர விழா பரவலாக்கப்பட்டு அரசியல் பார்வையால் தகிக்கத் தொடங்கியிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.