Skip to main content

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய டாஸ்மாக் மேலாளர்! - மதுரையில் அதிரடி சோதனை!

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
b

 

மதுரை மாவட்டம் -திருமங்கலம் - கப்பலூர் டாஸ்மாக் கிட்டங்கியில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 53 ஆயிரம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். டாஸ்மாக் மேலாளர் அமுதனிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

 

திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் டாஸ்மாக் கிட்டங்கி அமைந்துள்ளது.  இன்று மதியம் 3 மணி அளவில் விற்பனையாளர்களுக்கான கூட்டம் டாஸ்மாக் கிட்டங்கி மேலாளர் அமுதன் தலைமையில் நடைபெற்றது.   மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் விற்பனை கண்காணிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் இக் கூடத்தில் கலந்து கொண்டனர். அப்போது பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் காவல் ஆய்வாளர் குமரகுரு மற்றும் போலீசார் திடீரென கிட்டங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கிட்டங்கி மேலாளர் அமுதனிடம் ரூபாய் 53 ஆயிரம் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் டாஸ்மாக் கிட்டங்கி பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உரிமம் இல்லாமல் செயல்பட்ட 58 பார்கள்... அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

58 bars operating without a license, Officers who took action

 

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகரப் பகுதியில் 41 மதுபான கடைகளும், புறநகர் பகுதியில் 74 கடைகளும் சேர்த்து மொத்தம் 135 மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில், மதுக்கடை அருகில் மதுபான பார்கள் தனியார் மூலம் நடத்தப்பட்டுவருகிறது. இதற்காக ஏலம் நடத்தி பார்கள் நடத்த உரிமம் வழங்கப்பட்டுவரும் நிலையில், கரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள், மதுபான பார்கள் மூடப்பட்டன. இதற்கிடையில், கரோனா பரவல் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்கவில்லை. 

 

கடந்த 1ஆம் தேதி முதல் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து மதுபான பார்களை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பார்கள் திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தன. இந்த நிலையில், பெரும்பாலான மதுபான பார்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிமம் இல்லாத பார்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, உடனடியாக உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் தெரிவித்த காலக்கெடுவிற்குள் பார்களுக்கு உரிமம் பெறவில்லை. இதையடுத்து பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட பார்களை அதிகாரிகள் மூடினர்.

 

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது, “கோவை தெற்கு மாவட்ட பகுதியில் 135 மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. கடைகளுக்கு அருகில் பார்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி 113 மதுபான பார்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மதுபான பார்கள் மூடப்பட்டன. தற்போது கரோனா கட்டுக்குள் உள்ளதால் கடந்த 1ஆம் தேதி முதல் பார்கள் செயல்பட்டுவருகின்றன. ஆனால் 58 மதுபார்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தைச் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற பிறகு மதுபான பார்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும்” என கூறினார்கள்.

 

 

Next Story

டாஸ்மாக் பார்களில் நாளை முதல் நுழைவு கட்டணம்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
b

 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக டாஸ்மாக் பார்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

 

அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.  இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால்,  நாளை முதல் இதை விற்பனை செய்ய முடியாது. இதனால், பார் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

 

இந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.   எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் 10 ரூபாய் முதல் 20  ரூபாய் வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.