தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 நவம்பர் 17ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர்களுக்கு எதிராகவும் தி.மு.க. தரப்பில் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் துறை செயலாளர்கள் தரப்பில், வார்டு வரையறை தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் காரணமாகவே தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது எனவும், இதற்கு அதிகாரிகள் பொறுப்பாக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்துள்ளதாகவும், வார்டு சுழற்சி, இட ஒதுக்கீடு பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும், அதன்பின்னர் அறிவிப்பாணை வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இதன்பின்னர் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தலை நடத்துவது தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.எம்.சுப்ரமணியம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதைப் பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தனர்.