கிருஷ்ணகிரி அணை மதகு உடைப்பு மூன்று நாட்களில் சரிசெய்யப்படும்! - தம்பிதுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையின் மதகு ஒன்றில் ஏற்பட்டுள்ள உடைப்பு மூன்று நாட்களுக்கு சரிசெய்யப்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி அணையின் மதகு நேற்று முன்தினம் உடைந்தது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கே.ஆர்.பி அணை சென்று உடைப்பைப் பார்வையிட்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அணையின் மதகு உடைந்தது எதிர்பாராத ஒன்று. உடைந்த மதகு மூன்று நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்பதால், மக்கள் வெள்ள பாதிப்புகளை எண்ணி அஞ்ச வேண்டாம். கெலவரப்பள்ளி அணையில் நீர் உள்ளதால் விவசாயிகள் கவலை அடையவேண்டாம். தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி அணை 54 அடி கொள்ளளவு கொண்டது. அணையில் 51 அடி கொள்ளளவு நீர் இருந்த நிலையில், அதன் பிரதான மதகில் உடைப்பு ஏற்பட்டு நீர் வேகமாக வெளியேறியது. இதனால், 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் பாலத்தைக் கடக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.