Skip to main content

ஆளுருர் செல்லும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: கே. பாலகிருஷ்ணன் அறிக்கை

Published on 21/04/2018 | Edited on 21/04/2018

 

k.balakrishnan


தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஆளுநர் நியமித்த விசாரணைக் கமிஷனை ரத்து செய்யக்கோரி சிபிஐ (எம்) சார்பில் 25.4.2018 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அரசு விழாக்களுக்கு செல்லும் போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி தனது கல்லூரி மாணவிகளை பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் ஈடுபட்டதன் விளைவாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில், தமிழக ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது.  
 

இப்பிரச்சனையில் ஆளுநர் தானாகவே முன்வந்து பேட்டியளிப்பது மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் விசாரணைக்கு உள்ளாக வேண்டிய ஆளுநரே தானாக முன்வந்து ஒரு விசாரணை குழுவை அமைப்பது உண்மைகளை மூடி மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையே.

இது சம்பந்தமான பேட்டியின் போது, பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல்  அனைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் அவர் கன்னத்தை தட்டிய  செயல் ஆளுநரது நடத்தையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
 

தமிழகத்தில் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக நீடிப்பது உண்மையை மூடி மறைக்கவே வழிகோலும்.
 

ஏற்கனவே மாநில அரசு உரிமைகளை தட்டிப்பறித்து, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, ஆய்வு என்கிற பெயரில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருவது குறித்தான விமர்சனங்களை அவர் நிராகரித்தே வந்துள்ளார். 
 

எனவே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், இப்பிரச்சனையில் ஆளுநர் நியமித்துள்ள விசாரணைக் கமிஷனை ரத்து செய்ய வேண்டுமெனவும், ஆளுநர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரம்பியுள்ள இப்பிரச்சனையில் உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், உயர்மட்ட புலன் விசாரணைக்குழு அதிகாரிகளை நியமித்து, விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும் வலியுறுத்தி வரும் 25.4.2018 அன்று காலை 10.00 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தினை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைப்பார். மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
 

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆளுநர் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?” - கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
 K. Balakrishnan Condemned to finance minister nirmala sitharaman

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. அதே சமயம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஒருவர், “கேட்கும் போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம்மா?” எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தொடர்பாகப் பேசியது சர்ச்சையானது. 

இந்த சூழலில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதைப் பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (23-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசும், மத்திய நிதியமைச்சரும் நடந்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசைப் பற்றி முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் பணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசக்கூடாது. மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு எந்த மத்திய அமைச்சர் வந்தார்கள்? இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும் ஒரு ரூபாய் கூட கூடுதல் நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. நிவாரணப் பொருட்களுக்காகவும், மீட்புப் பணிக்காகவும், தமிழக முதல்வர் ரூ.21,000 கோடி கேட்டார். ஆனால், அதற்கு மத்திய அரசு ரூ.21 கூட தரவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஏன் தேசியப் பேரிடராக அறிவிக்கக் கூடாது? தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். தமிழக மக்களுக்குத் தர வேண்டிய நிதியை கொடுத்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” என்று கூறினார். 

Next Story

‘ஜெயலலிதா பேசிய மாநில நலன்; காற்றில் பறக்கவிட்ட இபிஎஸ்’ - பாலகிருஷ்ணன் சாடல்

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

K. Balakrishnan who severely criticized Edappadi Palinisamy

 

திமுக கூட்டணிக் கட்சிகளை குறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

 

இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளைப் பார்த்து இந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்று ஊடகங்களிடம் கூறுகிறார். மக்களுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவிடம் கட்சியின் சின்னத்தைக் காப்பாற்றவும், கட்சியை நடத்தவும் பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிசாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது. ஈரோடு இடைத்தேர்தலில் தனது சொந்தக் கட்சி வேட்பாளரை அறிவிப்பதற்கு கூட பாஜக தலைவரின் அனுமதிக்காக காத்திருந்த எடப்பாடி பழனிசாமியின் நிலைமையை கட்சியினரே அங்கலாய்த்து வருகின்றனர்.

 

K. Balakrishnan who severely criticized Edappadi Palinisamy

 

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளந்தது. மத்திய ஆட்சியின் தயவோடு அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பேசி வந்த மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளைக் கூட காற்றில் பறக்கவிட்டார். ஆட்சி அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று தயங்காமல் செயல்பட்டார். இதன் விளைவாக மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் விரோத சட்டங்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்கும் முடிவு உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஆதரித்தது அதிமுக. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியது உட்பட மத்திய அரசின் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகள் எதையும் எதிர்க்காமல் அடங்கி கிடந்தது பழனிசாமியின் ஆட்சி.

 

தேர்தலில் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சியான பிறகும் கூட இந்தப் போக்கில் மாற்றமில்லை. தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரின் கண்டனத்தையும் தாண்டி, ஆளுநரின் அரசியலுக்கு ஆதரவளித்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போதும் கூட, நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ள மோடியின் உற்ற நண்பரான அதானியின் ஊழல் - முறைகேடு பற்றியும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோடி ஆட்சியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல் குறித்த பிபிசி ஆவணப்படம் பற்றியும் எடப்பாடி வாய் திறக்கவில்லை. நாட்டு மக்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பற்றி பேசக்கூட விருப்பமில்லாத எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது நகைப்புக்குரியது. அவலத்திற்குரிய இந்தப் போக்கிற்கு வரும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தயாராகவுள்ளார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

 

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரமும் நாட்டின் சுதந்திரத்தையும், மதச்சார்பின்மையும், கூட்டாட்சி தத்துவத்தையும், இந்தியாவின் பன்முகத் தன்மையையும் சீரழித்து வருகின்றனர். மாநில உரிமைகளை நசுக்கி, ஒற்றை ஆட்சியை நிலைநாட்டுவதுதான் அவர்களின் நோக்கம். இந்தக் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசியல் சட்ட பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, மாநில உரிமைகள் உள்ளிட்ட கொள்கை அடிப்படையிலேயே திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக, ஆர்எஸ்எஸ் சதிக் கூட்டத்தை தோற்கடிக்க முயல்கின்றன. ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவினை அதிமுகதான் தாங்கிப் பிடித்து வருகிறது என்று பேசியிருக்கிறார். இதன் மூலம் சொந்த கட்சிக்கே எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதுகிறார் என்பது திண்ணம்” எனக் கூறியுள்ளார்.