Skip to main content

வைகோ மீது குறி வைப்பவர்கள் யார்? பின்னணி என்ன? போலீஸ் என்ன செய்கிறது: கி.வீரமணி கண்டனம்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
K. Veeramani Dravidar Kazhagam 500.jpg


வைகோவை தாக்க முயன்றவர்கள் யார்? இதன் பின்னணி என்ன? தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் வைகோ அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வாகன சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், குளத்தூரில் நேற்று (ஏப்.17) அவர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி சோடாபாட்டில்கள் வீசப்பட்டுள்ளன. சில நாள்களுக்கு முன் பும், தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் மதுரையருகே அவரைத் தாக்க முயன்றுள்ளனர்.
 

தொடர்ந்து அவர்மீது குறி வைப்பவர்கள் யார்? இதன் பின்னணி என்ன? தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? இவற்றுக்கு யார் காரணமானாலும், இந்தக் கோழைத்தனமான வன்முறையைக் கண்டிக்கிறோம்.
 

கழகக் கூட்டத்தில் வன்முறை
 

கடந்த 15 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா காவல்துறை அனுமதி பெற்று திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது, 20 ஆர்.எஸ்.எஸ். காலிகள் கூட்டத்தில் புகுந்து, நாற்காலிகளை உடைத்துக் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்துள்ளனர். காவல்துறையினர் மவுன சாட்சியாக இருந்திருக்கின்றனர்.
 

செய்தியைக் கேள்விப்பட்டு, அந்தப் பகுதிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும், பொதுமக்களும் காலித்தனத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். இதில் என்ன கொடுமை என்றால், காலித்தனத்தில் ஈடுபட்ட இருவரையும் தட்டிக் கேட்ட விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
 

அ.தி.மு.க. ஆட்சியின் - காவல்துறையின் இலட்சணம் இதுதானா?
 

காவல்துறையை நம்பிப் பயன் இல்லை என்ற எண்ணம் ஏற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல!
 

இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்